அப்போது மும்பை ரயிலில்.. இப்போது சண்டிகரில்... ராகுலின் ரயில் பயணங்கள்.. பார்ட் டூ!
சண்டிகர்: ஐந்து வருடங்களுக்கு முன்பு மும்பையில் புறநகர் ரயிலில் பயணித்து மக்களிடையே அலையை ஏற்படுத்தியிருந்தார் ராகுல் காந்தி. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரயில் பயணத்தை மேற்கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளார்.
டெல்லியிலிருந்து சண்டிகர் சென்ற சச்கந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த அவர் சாதாரண மக்களோடு மக்களாக பிரயாணம் செய்து அவர்களிடம் பேசினார்.
பஞ்சாப் விவசாயிகளின் துயரத்தில் தானும் பங்கேற்று அவர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் ராகுல் அவர்களிடையே கூறினார்.

சச்கந்த் எக்ஸ்பிரஸ்
சச்கந்த் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஜெனரல் கம்பார்ட்மென்ட்டில் சாதாரண உடையில் ராகுல் பயணித்தார். ஜீன்ஸ், டிசர்ட்டில் காணப்பட்ட அவர் நான்டெட் ரயில் நிலையத்திலிருந்து கோல்டன் டெம்பிள் நிலையம் வரை பயணித்தார். அவரைத் திடீரென பார்த்த பயணிகள் ஆச்சரியமடைந்தனர்.

ஜன்னலோர சீட்டுக்கு அருகே
ரயிலில் ஏறிய ராகுலுக்கு பலர் சீட் தர முன்வந்தனர். ராகுலோ ஜன்னலோர சீட்டுக்கு அடுத்த சீட்டில் போய் அமர்ந்து கொண்டு பயணிகளுடன் பேசத் தொடங்கினார்.

உங்களுக்காக குரல் கொடுப்பேன்
பயணிகளிடையே ராகுல் பேசுகையில், நான் உங்களது மாநிலத்திற்கு (பஞ்சாப்) போகப் போகிறேன். அங்குள்ள விவசாயிகளுக்கு உதவப் போகிறேன். அவர்களின் துயரத்தில் பங்கேற்கப் போகிறேன் என்றார் அவர்..

டீ சாப்பிடுங்க பாஸ்
பயணிகளில் பலரும் நான்டெட் தக்த் சாஹிப் கோவிலுக்குச் சென்று விட்டு திரும்பிய சீக்கிய யாத்ரீகர்கள் ஆவர். ராகுலைப் பார்த்த மாத்திரத்தில் அனைவரும் தங்களிடம் இருந்த பிஸ்கட், பழம், சப்பாத்தி உள்ளிட்டவற்றைக் கொடுத்தனர். சிலர் டீயும் போட்டுக் கொடுத்தனர். ராகும் டீயை சந்தோஷமாக வாங்கி குடித்தார்.

என்ன கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டார்
அது மட்டுமல்லாமல் ரயில் நின்ற பானிப்பட், கர்னால், குருசேத்திரா ஆகிய நிலையங்களில் பிளாட்பாரக் கடைகளில் விற்ற பல பொருட்களையும் கூட வாங்கி ராகுலுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

செல்பி காந்தி!
மேலும் பலர் ராகுலுடன் சேர்ந்து செல்போனில் போடடோவும் எடுத்துக் கொண்டனர். அதை வாட்ஸாப்பிலும் அனுப்பி மகிழ்ந்தனர். உறவினர்களுக்கும், போன் மூலம் தெரிவித்து மகிழ்ந்தனர்.

எப்ப அங்கிள் கல்யாணம்!
ஒரு சிறுவனைத் தூக்கி தனது மடியில் வைத்துக் கொண்டு அவனிடம் ராகுல் ஜாலியாகப் பேசினார். அவனோ, எப்போ அங்கிள் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க என்று கேட்டு ராகுலை சிரிக்க வைத்து விட்டான்.

மும்பைக்கு அடுத்து
இப்படியாக அம்பாலா வரை ரயிலில் பயணித்த ராகுல் அதன் பின்னர் அங்கிருந்து இறங்கி கார் மூலம் பதேகர் சாஹிப் மாவட்டத்திற்குச் சென்றார். 2010ம் ஆண்டு மும்பை வந்த ராகுல் காந்தி, அப்போது அந்தேரி முதல் தாதர் வரை ரயிலில் பயணித்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications