இங்க மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.. அங்க இலவச படகு சவாரி- திரிபுரா கல்வி துறை அதிரடி!
அகர்தலா: பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதைப் போல திரிபுராவில் இலவச படகு சேவையும் தொடங்கப்பட்டுள்ளது பாராட்டுகளை குவித்து வருகிறது.
தமிழ்நாட்டில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவதற்கு அரசு பேருந்துகளில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. 1996-97ல் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது.

பொதுவாக திமுக ஆட்சி தொடங்கிய திட்டம் எனில் அடுத்து வரும் அதிமுக ஆட்சி நிறுத்தி விடும்; அதிமுக ஆட்சி தொடங்கிய திட்டம் எனில் திமுக அரசு செயல்படுத்தாமல் விட்டுவிடும். ஆனால் தமிழ்நாட்டில் இலவச பஸ் பாஸ் திட்டம் எந்த ஒரு அரசாலும் முடக்கப்படாமல் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல கோடி ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வீட்டு பிள்ளைகள் கல்விச் செல்வம் பெற முடிகிறது; அவர்கள் வாழ்வில் கல்வி செல்வம் எனும் பெருவிளக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பல மாநிலங்களும் பல்வேறு நலத் திட்டங்களில் பின்பற்றி வருகின்றன.
தற்போது திரிபுரா மாநில கல்வித்துறை அமல்படுத்தியிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான இலவச படகு சவாரி திட்டம் பெரும் பாராட்டுக்குரியதாகி இருக்கிறது. திரிபுராவின் டம்பூர் ஏரி தீவுகளில் வசிக்கும் பள்ளி மாணவர்கள், போதுமான கட்டணம் செலுத்த இயலாமல் படகுகளில் சென்று படிக்க முடியாத நிலைமை இருந்து வந்தது. இதற்கு முடிவு கட்டும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு என இலவச படகு சவாரியை திரிபுரா கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இத்திட்டம் அந்நிலத்தின் ஆதி குடி மக்களின் கல்வி பசிக்கு பெருந்தீனியாக இருக்கிறது என புகழ்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications