சசிகலா, தினகரன் நீக்கம் செல்லாது... அதிமுக அம்மா தேர்தல் ஆணையத்தில் புதிய மனு
பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லி: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று டிடிவி தினகரன் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி இரு அணிகளின் பொதுக் குழு கூட்டம் கூடியது. அதில் சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இரு அணிகளும் இணைந்து விட்டது குறித்தும், பொதுச் செயலாளர் பதவி நியமனம் ரத்து செய்யப்பட்டது குறித்தும் புதிதாக தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து இரட்டை இலை சின்னத்தை மீட்பது என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என டிடிவி தினகரன் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்பிக்கள் விஜிலா சத்தியானந்த், வசந்தி முருகேசன், செங்குட்டுவன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதியிடம் மனு தாக்கல் செய்துள்ளனர்.