டிடிவி தினகரனுக்கு மே 15ம் தேதி வரை நீதிமன்ற காவல்.. டெல்லி கோர்ட் உத்தரவு
டெல்லி: டிடிவி தினகரனுக்கு மே 15ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிக்கலில் உள்ள, இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு பெற்று தருவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அதிமுக அம்மா கட்சி துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் ரூ.50 கோடி பேரம் பேசியுள்ளார். முதற்கட்டமாக ரூ.1.30 கோடி பணம் ஹவாலா ஏஜென்ட்கள் மூலம் தரப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லி குற்றவியல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, நட்சத்திர ஹோட்டலில் பதுங்கியிருந்த பெங்களூரை சேர்ந்த புரோக்கர் சுகேஷ் சந்திர சேகரை கடந்த 16ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
தினகரன் கைது
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி.தினகரன், மல்லிகார்ஜூனா, தினகரன் உதவியாளர் ஜனார்த்தனன், வக்கீல் குமார் ஆகியோரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, டிடிவி தினகரன் பணம் கொடுத்ததாக ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவை போலீசார் கைது செய்தனர்.
ஹவாலா பணம்
இதற்கிடையே சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில் ரூ.50 கோடி ஹவாலா பணத்தை டிடிவி தினகரனிடம் இருந்து டெல்லிக்கு கொண்டு வருவதற்கு முக்கிய ஏஜென்டாக செயல்பட்ட நத்துசிங் என்கிற நரேஷை 2 நாட்கள் முன்பு டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் இருந்து ஹவாலா பணம் கொண்டு வர உடந்தையாக இருந்தவர்கள் யார், யார் என்பது குறித்த முகவரியுடன் கூடிய முழு விவரங்களையும் நரேஷ் டெல்லி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணைய அதிகாரி
டி.டி.வி.தினகரனிடம் பேரம் பேசிய தேர்தல் ஆணைய அதிகாரி யார் என டெல்லி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டை இலை சின்னம்பெற தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் தர டி.டி.வி.தினகரன் முயற்சித்துள்ளார். கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் தகவலை அடுத்து டி.டி.வி.தினகரனும் டெல்லியில் கைதானார். டி.டி.வி.தினகரனிடம் லஞ்சம் பெற முயன்ற தேர்தல் ஆணைய அதிகாரி யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
இதனிடையே, கடந்த மாதம் 26ம் தேதி தினகரனுக்கு விதிக்கப்பட்ட 5 நாள் போலீஸ் காவல் இன்று முடிவடைந்தது. எனவே பிற்பகலில், மீண்டும் தினகரனை, தீஸ்ஹசாரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் போலீசார். அவரது நண்பரான மல்லிகார்ஜூனாவையும் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, டிடிவி தினகரனுக்கு மே 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோர்ட் உத்தரவிட்டது. எனவே தினகரன்15ம் தேதிவரை சிறையிலேயே அடைக்கப்பட்டிருப்பார்.