ஹைதராபாத்தில் திடீர் மதக் கலவரம்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி- ஊரடங்கு உத்தரவு
ஹைதராபாத்: இரு பிரிவினருக்கு நடுவே எழுந்த மோதலை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தால் ஹைதராபாத்தில் பதற்றம் நிலவுகிறது.
ஹைதராபாத்தின் ராஜேந்திரநகர் பகுதியில் இன்று இருவேறு பிரிவினருக்கு நடுவே திடீரென மோதல் நடந்துள்ளது. இதையறிந்து சென்ற போலீசார் கலவரக்காரர்களை கலைந்துபோகச் சொல்லி எச்சரித்தனர்.
ஆனால் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி கலவரக்காரர்கள் தாக்குதலை தொடர்ந்ததால் அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 3 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து ராஜேந்திரநகர் பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில போலீஸ் டிஜிபி பிரசாத் ராவ், போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 3பேர் இறந்துள்ளதை உறுதி செய்துள்ளார்.
சைபர்பாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் மற்றும் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அனுராக் ஷரம் இருவருமே சம்பவ இடத்தை பார்வையிட்டனர். நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், கலவரத்துக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.