டூர் போன இடத்தில் கோரச் சம்பவம்! மூணாறு அருகே விபத்தில் நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் பலி!
மூணாறு: மூணாறு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் உயிரிழந்தனர். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இருந்து சுற்றுலா சென்ற மாணவர்கள் எக்கோ பாயின்ட் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள், 3 ஆசிரியர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் குண்டலா அணையை பார்வையிடச் செல்லும் வழியில் அவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது.

மூணாறு மலைப் பகுதிக்கு உட்பட்ட மட்டுப்பெட்டி எனும் இடத்தின் எக்கோ பாயிண்ட் சாலை வளைவில் அவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்துள்ளது. இதில் கல்லூரி மாணவிகள் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மூணாறு காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எக்கோ பாயின்ட் சாலை வளைவில், முன்னே சென்ற வாகனத்தை முந்திசெல்ல முயன்ற சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே கவிழ்ந்ததாக பேருந்தில் இருந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 40 பேருடன் சென்ற பேருந்தில் இருந்த 15 பேர் காயங்களுடன் மூணாறு டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் சுற்றுலா சென்றிருந்தபோது மூணாறு அருகே விபத்தில் பலியான இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications