இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட உல்பா தலைவர் அனுப் சேத்தியா... வட கிழக்கில் அமைதி திரும்புமா?
டெல்லி: உல்பா தலைவர் அனுப் சேத்தியா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் மூலம் வட கிழக்கு மாநிலங்களில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இத்தனை காலமாக வங்கதேச சிறையில் அடைக்கப்பட்டிருந்த உல்பா தலைவர் அனுப் சேத்தியா நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
48 வயதான அனுப் சேத்தியா தடை செய்யப்பட்ட யுனைடட் லிபரேஷன் பிரண்ட் ஆஃப் அசாம் (உல்பா) இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆவார். அவர் மீது கொலை, ஆள் கடத்தல், வங்கிக் கொள்ளை, பணம் பறித்தல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
17 ஆண்டுகள் டாக்கா சிறையில் இருந்த சேத்தியா வங்கதேசத்தில் அரசியல் அடைக்கலம் கேட்டு கடந்த 2005,2008, மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் மனு செய்தார். இதுகுறித்து அந்நாட்டு அரசு எவ்வித முடிவும் எடுக்காத காரணத்தால் 2003-ல் அவருடைய தண்டனை காலம் முடிந்த பிறகும், பலத்த பாதுகாப்புடன் சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியில் தலையீட்டாலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முயற்சிகளாலும் கோபால் பருவா என்ற அனுப் சேத்தியாவை வங்கதேசம் இந்தியாவிடம் ஒப்படைத்தது.
அவரை இந்தியாவிடம் ஒப்படைத்தான் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு திஈர்வு காண வழி ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் உல்பா அமைப்பினருடன் மத்திய அரசு 6 முறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் பேச்சவார்த்தையில் இதுவரை எவ்வித உடன்பாடும் எட்டப்படாததையடுத்து அனுப் சேத்தியாவின் வருகை ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.