200 பேருடன் கார் ஊர்வலம்... லக்னோவில் டிராபிக் ஜாம்... மத்திய அமைச்சர் அனுப்பிரியா மீது வழக்கு!
லக்னோ: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் அனுப்பிரியா படேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது லக்னோ போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் தொகுதியில் இருந்து எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டவர் அனுப்பிரியா படேல். தற்போது இவர் மத்திய இணையமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஆனபிறகு முதன்முறையாக நேற்று முன்தினம் அவர் உத்திரப்பிரதேசம் வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் விமான நிலையத்தில் குவிந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த அனுப்பிரியா சென்றார். அப்போது அவரது காரை பின்தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இதனால் லக்னோவில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் சென்ற மற்ற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அனுப்பிரியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.