சட்டசபை தேர்தலுக்கு பிறகு உத்தரப்பிரதேசத்தின் தலைவிதி மாறப்போகிறது: அமித் ஷா
உத்தரப்பிரதேச தேர்தல் அம்மாநிலத்தின் விதியை மாற்றும் தேர்தல் என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைவிதி சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மாறப் போகிறது என பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா கூறினார்.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் 5-ம் கட்ட தேர்தலானது வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. 52 தொகுதிகளை உள்ளடக்கிய இத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைதால் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், லக்னோ அருகே உள்ள அம்பேத்கர் நகரில் நடந்த பா.ஜ.க.வின் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த சட்டசபைத் தேர்தல் வெறும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் அல்ல. உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.
குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு இடையே நடந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல். ஊழல் கட்சிகளான சமாஜ்வாதியும் காங்கிரசும் இணைந்து மக்களை ஏமாற்றுகிறது.
மாயாவதியும் அகிலேஷ் யாதவும் ஒருவரைக்கொருவர் மாறிமாறி குற்றம் சாட்டி கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தை பாழாக்கி விட்டனர். தற்போது, நடைபெறும் தேர்தல் ஒரு கட்சியை தேர்ந்தெடுப்பதற்காக மட்டும் அல்ல உத்தரப்பிரதேசத்தின் தலைவிதியை மாற்றுவதற்கான தேர்தல். இவ்வாறு அமித் ஷா கூறினார்.