பினாயில் வேண்டாம், கோமியத்தை வைத்து ஆபீஸை சுத்தம் செய்க: மேனகா காந்தி
டெல்லி: பினாயிலுக்கு பதிலாக கோமியத்தை வைத்து அலுவலகங்களை சுத்தம் செய்யுமாறு மத்திய அமைச்சர் மேனகா காந்தி தனது சகாக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தனது அமைச்சரவை சகாக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
உங்கள் அலுவலகங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்டு வரும் பினாயிலுக்கு பதிலாக கோமியத்தால் செய்யப்படும் கௌனிலை பயன்படுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். பினாயிலில் கேடு விளைவிக்கும் ரசாயனம் உள்ளது. ஆனால் கௌனிலில் ரசாயனமே இல்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஹோலி கவ் பவுன்டேஷன் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு கோமியத்தால் ஆன கௌனிலை விற்பனை செய்து வருகிறது. பஞ்சகவ்யா எனப்படும் கோமியம், சாணம் உள்பட மாடுகளில் இருந்து பெறப்படும் 5 பொருட்களை வைத்து பல ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் ஸ்ரீபத் நாயக் முன்பு தெரிவித்திருந்தார்.
ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் 7 ஆயிரத்து 835 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் பஞ்சகவ்யாவை வைத்து மருந்து தயாரிப்பது தெரிய வந்துள்ளது. பால், தயிர், நெய், கோமியம் மற்றும் சாணம் ஆகியவை தான் பஞ்சகவ்யா என்று அழைக்கப்படுகிறது.