உ.பி. தொழில் நுட்ப பல்கலைக்கழகத்துக்கு அப்துல் கலாம் பெயர்... முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
லக்னோ : உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
லக்னோவில் உ.பி. தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் என மாற்றப்படும் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
இந்த பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தில் அப்துல் கலாம் நினைவாக மிகப்பெரிய அளவில் நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்துடன் ஆழமான பிணைப்பை அப்துல் கலாம் கொண்டிருந்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
இதற்கு முன், பீகார் மாநிலம் பாட்னாவில் கிஷான்கஞ்சில் உள்ள வேளாண் கல்லுாரி மற்றும் அறிவியல் நகரத்துக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பீகாரில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதனை முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்தார்.
இதே போன்று மறைந்த அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதியை வாசிப்பு தினமாக கொண்டாடப்படும் என்று மகாராஷ்ட்ர அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசும், மறைந்த அப்துல் கலாம் பெயரில் அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலுக்கு பாடுபட்ட இளைஞர் தேர்வு செய்து, அவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.