குட்டி தாஜ்மஹால் கட்டும் முதியவருக்கு நிதியுதவி செய்யும் முதல்வர் அகிலேஷ்
லக்னோ: தன்னுடைய மனைவி நினைவாக குட்டி தாஜ்மஹால் கட்டி வரும் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டருக்கு நிதி உதவி செய்ய உத்தர பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள காசர் கலான் கிராமத்தைச் சேர்ந்தவர் பைசுல் ஹஸன் காதிரி(80). அவருக்கும் தாஜ்முல்லி என்பவருக்கும் கடந்த 1953ம் ஆண்டு திருமணம் ஆனது. அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தாஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2011ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

இதையடுத்து பைசுல் தான் வசிக்கும் கிராமத்தில் தனது மனைவியின் நினைவாக குட்டி தாஜ்மஹாலை கட்டி வருகிறார். பைசுல் தனது மனைவியின் நகை, சேமிப்பு, பி.எஃப் என மொத்தம் ரூ.14 லட்சத்தை தாஜ்மஹாலுக்காக செலவு செய்துள்ளார். ஆனால் மார்பிள் வேலைகளை முடிக்க ரூ.6 முதல் ரூ.7 லட்சம் வரை தேவைப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து அறிந்த உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பைசுலுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார்.
இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் பி. சந்திரகலா கூறுகையில்,
முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியதன்பேரில் நான் பைசுலை தொடர்பு கொண்டு அவரது தாஜ்மஹால் வேலைகள் எந்த அளவு முடிந்துள்ளது என்று கேட்டறிந்தேன். விரைவில் பைசுல் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தான் இறந்தால் தனது உடலை குட்டி தாஜ்மஹாலில் உள்ள தனது மனைவியின் கல்லறை அருகே அடக்கம் செய்ய பைசுல் விருப்பம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications