கொரோனா அச்சுறுத்தல்.. உத்தரகண்ட்டில் கன்வர் யாத்திரை ரத்து.. ஆனால் உ.பி-இல் அனுமதி அளித்த யோகி அரசு
டேராடூன்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கன்வர் யாத்திரையை ரத்து செய்ய உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ள நிலையில், உபி யோகி அரசு கொரோனா அச்சுறுத்தலைத் தாண்டியும் கன்வர் யாத்திரை நடத்த அனுமதி அளித்துள்ளது.
கொரோனா 2ஆம் அலை நாட்டில் இப்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. இருப்பினும், மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவிக்கும்போது, உட்சபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்து கடவுளான சிவன் பக்தர்கள் நடத்தும் இரண்டு வார யாத்திரை தான் கன்வர் யாத்திரை. இந்த ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி இந்த கவன்வர் யாத்திரை தொடங்குவதாக இருந்தது.
பாத யாத்திரையான இதில் உத்தரகண்ட் உள்ளிட்ட இதர பகுதிகளிலிருந்து கங்கை புனித நீரைப் பக்தர்கள் சேகரிப்பார்கள். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக 2ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் இந்த கன்வர் யாத்திரையை உத்தரகண்ட் அரசு ரத்து செய்துள்ளது. ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இது குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் தாமி கூறுகையில், "கடர்பூர் பகுதியில் உருமாறிய கொரோனா மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஹரித்வார் கொரோனா மையமாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை. கன்வர் யாத்திரை கலாசாரத்தின் ஒரு பகுதி என்பதில் மாற்றுக்கருதித்லை, ஆனால் உயிர்களைக் காப்பது அதைவிட முக்கியம். எனவே தற்போதுள்ள நிலையை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது" என்று அவர் கூறினார்.
அதேநேரம் கொரோனா அச்சுறுத்தலைத் தாண்டியும் கன்வர் யாத்திரை நடத்த உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்த யாத்திரையில் கொரோனா பரல் ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளிடம் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications