டிச.25 வாஜ்பாய் பிறந்தநாள், தேசிய நல்லாட்சி தினமாக கொண்டாடப்படும்: மோடி
டெல்லி: வாஜ்பாயின் பிறந்தநாள், தேசிய நல்லாட்சிமுறை தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த எம்பிக்கள் கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இதுபற்றி, நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது:
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதி, தேசிய நல்லாட்சிமுறை தினமாக கொண்டாடப்படும் என்று நரேந்திர மோடி கூறினார். அன்றைய தினத்தை, பாஜ எம்பிக்களும், அரசும் நல்லாட்சியின் அடையாளமாக மாற்ற வேண்டும். அன்றைய தினத்தில், பாஜ எம்பிக்கள் தங்களது தொகுதியில், தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக ஒருமணி நேரம் விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதாப் ரூடி கூறினார்.
முன்னதாக, நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறி, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு பாராட்டுக்களை தெரிவித்தார்.
மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் அமித்ஷா, தற்போது நடந்து வரும் உறுப்பினர் சேர்க்கையில் மொத்தம் 10 கோடி உறுப்பினர்களை சேர்க்க கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறி னார்.