ஜனாதிபதி தேர்தல்.. ராம்நாத் கோவிந்தின் வேட்புமனு தாக்கலில் பங்கேற்க எடப்பாடிக்கு அழைப்பு
டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தின் வேட்புமனு தாக்கலுக்கு வருமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி வருகின்ற ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார்.
ராம்நாத் கோவிந்த்தை ஒருமனதாக தேர்வு செய்யும் முயற்சியில் பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு கோரியுள்ளார்.
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் போன் போட்டு அதிமுகவின் ஆதரவைக் கேட்டார் பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் மனுதாக்கலின் போது கலந்துகொள்ளுமாறு தமிழக முதல்வர் பழனிசாமிக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வெங்கய்யா நாயுடு, வரும் 23ம் தேதி ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.