5 மாநில சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் பாஜக... விறுவிறு ஆலோசனையில் தலைவர்கள்
டெல்லி: தமிழகம், கேரளா, புதுவை, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு விறுவிறுப்பாகவே தயாராகி வருகிறது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி. அஸ்ஸாமில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும்; தமிழகம், கேரளா, புதுவை, மேற்குவங்கத்தில் வலுவாக கால் பதிக்க வேண்டும் என்பதற்காக கூட்டல், கழித்தல் கணக்குகளை பரபரப்பாக போட்டு வருகிறது பாஜக.
தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளா, புதுவை ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் மே 23 மற்றும் ஜூன் 6க்கு இடைப்பட்ட காலங்களில் நிறைவடைகிறது. எனவே அதற்குள் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் முடிக்க வேண்டும்.
அதே நேரம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வழக்கமாக பிப்ரவரி 3வது வாரத்தில் தொடங்கி மே முதல் வாரத்தில் நிறைவடையும் என்பதால் நாடாளுமன்றம் கூடும் நாட்களும் சட்டசபை தேர்தல் நடைபெறும் நாட்களும் ஒன்றாக அமையாத வகையில் தேர்தல் தேதிகளை முடிவு செய்ய எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ஆலோசித்து தேர்தல் தேதி குறித்து முடிவெடுப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு டெல்லியில் இன்று நடத்தியது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூட்டிய இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், அசாம் கனபரிசத், உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் முடிந்ததும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூடி பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களை இறுதி செய்கிறது. அப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.
சட்டசபை தேர்தல்கள்
2014ம் ஆண்டு 4 மாநில சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பாஜக அதன்பின்னர் டெல்லி, பீகார் மாநிலங்களில் தோல்வியடைந்துள்ளது. தற்போது சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் அசாம் மாநிலம் மட்டுமே பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள மாநிலமாக உள்ளது. ஏனெனில் அங்கு 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆண்டு வருகிறது. இதனால் காங்கிரஸ் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அறுவடை செய்ய காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து அவர்களில் ஒருவரையே முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்துள்ளது பாஜக.
வலுவான கூட்டணி
கேரளா, மேற்கு வங்கம், தமிழகம், புதுவையில் பாஜக வலுவான நிலையில் காலூன்ற நினைக்கிறது எனவேதான் இங்கு பலமான கூட்டணி அமைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலைப் போல பாமக, தேமுதிகவை கூட்டணியில் இணைப்பதன் மூலம் சில எம்.எல்.ஏக்களை சட்டசபைக்கு அனுப்பமுடியும் என்பது பாஜகவின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் பாமகவோ தங்கள் தலைமையிலான கூட்டணிக்கு பாஜக வரலாம் என்று கூறி வருகிறது. விஜயகாந்தோ எந்த சிக்னலும் இதுவரை காட்டவில்லை.
சுவாமியின் திமுக பாசம்
எனவேதான் திமுக பக்கம் சாய்வது போல சுப்ரமணிய சுவாமியை விட்டு ஆழம் பார்த்தது பாஜக. கூடவே தேமுதிகவும் திமுக பக்கம் வரலாம் என்பது போல நூல் விட்டு பார்த்துள்ளது பாஜக. ஆனால் விஜயகாந்த் பக்கமிருந்து எந்த ரியாக்சனும் இதுவரை வரவில்லை.
விஜயகாந்த் முடிவு
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். இதனால் தொடர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிடும் முடிவுக்கு வந்த அவர் லோக்சபா தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்தார்.
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி
லோக்சபா தேர்தலில் ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை எனினும் சட்டசபை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் விரும்புவதை அறிந்ததும் அவரது கட்சியினர் தி.மு.கவுடன் கூட்டணி சேர வேண்டும் என வலியுறுத்த துவங்கியுள்ளனர். ஆனால் அதற்கும் விஜயகாந்த் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே சுப்ரமணிய சுவாமியை விட்டு ஆழம் பார்த்து வருகிறது பாஜக.
கனவு நனவாகுமா?
இதனிடையே கேரளா வந்துள்ள பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து பேசி வருகின்றனர். அப்போது நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவைப் பொருத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் அதிலேயே நீடிப்பதாக கூறி வந்தாலும், பாமக அதை ஒத்துக்கொள்ளவில்லை. விஜயகாந்த் எந்த முடிவும் அறிவிக்கவில்லை. எனவே புதிய வலுவான கூட்டணி அமைந்தால் மட்டுமே தமிழக சட்டசபைக்குள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நுழைய முடியும் என்பது பாஜகவினரின் கருத்தாகும்...
கால்குலேஷன்கள் கனவாகுமோ? நனவாகுமோ?