ஜேட்லியை சந்தித்தது வெறும் ஸ்டன்ட்? விவசாயிகள் பிரச்சினை பற்றி பேசலியாமே விஷால் #StandWithFarmers
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் சந்தித்து பேசியது விவசாயிகள் பிரச்சினைக்காக இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் ஒரு குழுவாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டக்காரர்களை விஷால், பிரகாஷ் ராஜ், பாண்டிராஜ் உள்ளிட்டோர் சமீபத்தில் சந்தித்து ஆறுதல் கூறினர். மத்திய அரசுக்கு விஷயத்தை கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம், விவசாயிகளை சந்தித்து பேசிய இந்த நடிகர்கள், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்து ஒரு மனுவை அளித்தனர். பிறகு விவசாயிகளிடம் வந்து, உங்கள் பிரச்சினைகள் தீர நிதி அமைச்சரிடம் பேசியுள்ளோம் என கூறினர்.
அனுமதியில்லை
ஆனால், நிதி அமைச்சக வட்டாரங்களோ வேறு மாதிரி கூறியுள்ளன. எந்தவிதமான முன் அனுமதியும் இல்லாமல், நிதி அமைச்சர் வீட்டிற்கு வந்த நடிகர்கள்,அவரை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். நடிகர் சங்கம் பெயரில் அமைச்சருக்கு ஒரு விசிட்டிங் கார்டையும் கொடுத்தனுப்பியுள்ளனர்.
ஜேட்லியுடன் சந்திப்பு
டெல்லியில் உள்ள ஒரு பெரிய ரியல் எஸ்டேட் பிரமுகரை இவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவரும் அமைச்சரிடம் பேசி நேரம் ஒதுக்க கேட்டுக்கொண்டுள்ளார். மும்பை கிளம்பும் அவசரத்தில் இருந்த ஜேட்லியும், சரி, ஓ.கே என கூறியுள்ளார். ஆனால் ஜேட்லி இது தென்னிந்திய நடிகர் சங்க பிரச்னை என கருதியிருந்துள்ளார்.
போட்டோ கட்டாயம்
ஜேட்லியை சந்தித்த விஷால் மற்றும் சக சினிமா கலைஞர்கள் அந்த சந்திப்பை புகைப்படமாகவும் எடுத்துக்கொண்டு மீடியாக்களிடம் கொடுத்துள்ளனர். தமிழக விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஜேட்லியிடம் கொடுத்த மனுவில் நடிகர் சங்க நிர்வாகிகள் அதுபோல எதையுமே குறிப்பிடவில்லை. ஆனால், அவர்கள் கொடுத்த மனுவில், 'இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது என்று செய்தி வெளியிட்டுள்ளது ஒரு தமிழ் நாளிதழ்.
நின்றபடி பேச்சு
வெறும் ஒரு நிமிடமே நடந்த இந்த சந்திப்பின்போது, நடிகர்களை அமைச்சர் அமரக் கூட சொல்லவில்லை. கை கட்டியபடிதான் அவர்கள் நின்றிருந்தனர். தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, நிதி அமைச்சரிடம், நடிகர்கள் எதுவும் பேசவே இல்லை.
தன்னை சந்தித்தவர்களில் பிரகாஷ் ராஜை தவிர்த்து பிறர் சினிமா கலைஞர்கள் என்பதே அமைச்சருக்கு தெரியாதாம்.
சூட்டிங்கிற்கு வீடு
விஷால் உள்ளிட்டோர் திடீரென டெல்லி செல்ல காரணம் என்ன என்று சினிமாத்துறை வட்டாரங்களிடம் கேட்டபோது, அவர்கள், சினிமா சூட்டிங்கிற்காக வீடு பிடிக்க டெல்லி வந்துள்ளது தெரியவந்தது. ஆனால் விவசாய பிரச்சினைக்கு போராட வந்தவர்களை போல பில்டப் கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. டெல்லியில் நேற்றுமுன்தினம் சில இளம் விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றபோது வேறு யாரையுமே சமாதானம் பேச விடாமல் விஷாமல் மட்டுமே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அடம் பிடித்தார். பிறரை அதட்டி ஒடுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.