டிச.3 முதல் வோடபோன்-ஐடியா, ஏர்டெல் கட்டணங்கள் அதிரடியாக உயருகிறது.. டிச. 6ல் ஜியோ அதிரடி
டெல்லி: வோடபோன்-ஐடியா நிறுவனம் ப்ரிப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தை வரும் டிசம்பர் 3ம் தேதி முதல் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
ஜியோவின் வருகைக்கு பின் மிகப்பெரிய அளவில் வோடபோன்-ஐடியா நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது இதேபோல் தான் ஏர்டெல் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இதற்கிடையே வரி தொடர்பான வழக்கில் தொலைத்தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவையை வோடஃபோன் நிறுவனம் செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது இதனால் வோடஃபோன் ஐடியா நிறுவனம் ஏறக்குறைய ரூ.50 ஆயிரத்து 921 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இதேபோல் ஏர்டெலும் பல ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை அளித்து வந்த சலுகைகளை குறைத்துக்கொள்ள வோடபோன்-ஐடியா, ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களுமே முடிவு செய்துள்ளன.
அறிவிக்கவில்லை
இரு நிறுவனங்களுமே இந்த மாதத்தில் இருந்து கட்டணத்தை உயர்த்தப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன. ஆனால் இதுவரை எவ்வளவு உயர்த்தப்படும் என்று முதல் உயர்த்தப்படும் என்பதை அறிவிக்காமல் இருந்தன.
கட்டணம் உயருகிறது
இந்நிலையில் வோடபோன்-ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனம் பிரிப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கான மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணத்தை வரும் டிசம்பர் 3ம் தேதி அதிகாலை 12.00மணி முதல் நாடு முழுவதும் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது உள்ள கட்டணத்தை விட 42 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜியோ கட்டணம்
இதனிடையே ஏர்டெல் நிறுவனமும் டிசம்பர் 3ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது வோடபோன் போல் 42 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஜியோவும் 6ம் தேதி முதல் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
ரிசார்ஜ் செய்தால்
28 நாட்கள், 84 நாட்கள், 365 நாட்கள் என அனைத்து பிளான்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு நாளுக்குள் ரீசார்ஜ் செய்தால் கட்டண உயர்வு சுமையில் இருந்து கொஞ்சம் தப்பிக்க வாய்ப்பு உள்ளது.