பாட்னாவில் எதிர்க்கட்சி பார்ட்னர்களை ஜூன் 12-ல் ஒருங்கிணைக்கும் நிதிஷ்.. மமதாவும் கை கோர்க்கிறாராம்!
பாட்னா: லோக்சபா தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் முயற்சிகளில் ஒன்றாக ஜூன் 12-ந் தேதி பாட்னாவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் கை கோர்க்க இருக்கிறார்.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கடந்த 2 தேர்தல்களில் சொற்ப இடங்களில்தான் வெல்ல முடிந்தது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட பெற முடியாத பரிதாப நிலையில்தான் காங்கிரஸ் உள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவை காங்கிரஸ் கட்சியால் தனித்து எதிர்கொள்ளவே முடியாது என்பது யதார்த்தம். இதனால் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி தேவை என்பதை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.

அதேநேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மெகா எதிர்க்கட்சிகள் கூட்டணி, காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணி, காங்கிரஸையும் உள்ளடக்கியா ஒரு பொது கூட்டணி என்கிற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பதும் கேள்விக்குறியாகவே பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். பீகாரில் ஜேடியூ-ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் இணைந்த கூட்டணி அரசு உள்ளது. இதே பாணியில் மெகா கூட்டணியை தேசிய அளவில் கட்டமைப்பதில் நிதிஷ்குமார் தீவிரமாக இறங்கி உள்ளார். இன்னொரு பக்கம், டெல்லி சேவைகள் அவசர சட்ட விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் 16 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டும் இருக்கின்றன.

இதன் அடுத்த கட்டமாக பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ந் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார். இந்தக் கூட்டத்தில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, என்சிபி, உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தற்போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பாட்னா கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்திருப்பதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications