ஜெ., மமதா, மாயாவதி ஆதரவை கோரும் நிலை எங்களுக்கு வராது: மோடி நம்பிக்கை
அகமதாபாத்: லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஜெயலலிதா, மமதா பானர்ஜி, மாயாவதி ஆகியோரின் ஆதரவைக் கோரும் நிலைமை பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு வராது.. ஆட்சி அமைக்க தேவையான இடங்களைப் பெறுவோம் என்று அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு மோடி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
லோக்சபா தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பலத்த தோல்வியை பெற்றுத் தரும். 100 தொகுதிகளில் காங்கிரசால் வெல்ல முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது. தோல்வி நிச்சயம் என்பதால் அக்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன.
லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க போதுமான எம்.பி.க்கள் ஆதரவு கிடைக்கும். மமதா, மாயாவதி, ஜெயலலிதா போன்றோரின் ஆதரவைக் கேட்கும் நிலை வராது.
தோல்வி நிச்சயம் என்பதாலேயே காங்கிரஸ் கட்சி துணைத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறியுள்ளது.
நாட்டில் மோடி அலை மட்டும் வீசவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையும் வீசுகிறது. நான் ஆட்சியில் அமருவதால் பிற மதத்தினர் அச்சப்பட தேவையில்லை.
நான் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சொர்க்கமாக மாற்றுவேன் என சொன்னதே இல்லை. அதிசயங்களை மக்கள் எப்போதுமே விரும்புவதில்லை. திடமான, திறமையான, அறிவார்ந்த அரசை தான் விரும்புகின்றனர்.
அரசியல் காரணங்களுக்காக நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேட்டையாடப்படுகிறேன்,. அந்த வலி எனக்குத் தெரியும். அதனால் தான் பழிவாங்கும் அரசியலை நான் வெறுக்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ள மாட்டேன். அப்படியெனில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று அர்த்தம்.
இவ்வாறு மோடி கூறியுள்ளார்.