மே.வங்கத்தில் தொடரும் சோகம்: மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 15 குழந்தைகள் சாவு
மேற்கு வங்க மாநிலம் வடக்கு பகுதியில் சிலிகுரி மாவட்ட அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. தாயின் ஊட்டச்சத்து குறைபாடு, எடை குறைந்த குழந்தைகள், குறைபிரசவம், நோய் கிருமி தாக்குதல் போன்ள பல காரணங்களால் பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் நாள்தோறும் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் மொத்தம் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எடைக்குறைவு, நோய் தொற்றுதல் காரணமாக குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மருத்துவமனையின் அலட்சியத்தால்தான் ஒரே நேரத்தில் இத்தனை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவமனைகளில் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இறப்பது கடந்த 2011ம் ஆண்டு முதல் தொடர்கதையாகி வருகிறது. 2011ம் ஆண்டு கொல்கத்தாவிலுள்ள பி.சி.ராய் குழந்தைகள் நினைவு மருத்துவமனையில், 18 குழந்தைகள் உயிரிழந்தனர்.
மால்டா மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மூன்றாண்டுகளில் 350 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜனவரியில் மால்டா மாவட்டத்தில் மீண்டும் 18 குழந்தைகள் உயிரிழந்தனர். சிறிது காலத்திற்கு இப்பிரச்சனை இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.