மத்திய அரசு டெல்லிக்கு அழைத்த.. மே.வங்க தலைமை செயலாளர் பந்தோபத்யா ஓய்வு.. மம்தாவின் ஆலோசகராக நியமனம்
கொல்கத்தா: மேற்கு வங்க தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யா டெல்லியில் ஆஜராக வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில் இன்று அவர் ஓய்வு பெற்றார். மூன்று மாதம் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் இன்று அவர் ஓய்வு பெற்றார்.
மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையிலான மோதல் கடந்த சில நாட்களாக தீவிரமாகி வருகிறது. முக்கியமாக மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் தாக்கியது தொடர்பாக பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளாதது பெரிய சர்ச்சசையானது.
இந்த கூட்டத்தில் மேற்கு வங்கத்தின் தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யா கலந்து கொண்டார். அதோடு அதற்கு முன் பிரதமர் மோடியுடன் மம்தா நடந்த இருந்த சந்திப்பில், மம்தா 20 நிமிடம் தாமதமாக வந்ததாகவும் பாஜக புகார் வைத்தது. இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாயை மத்திய அரசு டெல்லிக்கு அழைத்தது.
மத்திய அரசு பணியில் சேரவில்லை- மே.வங்க தலைமை செயலாளர் ஆலாபனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
விடுவிப்பு
இவரை மாநில பணியில் இருந்து விடுவித்து மத்திய பணிக்கு அனுப்பி வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதோடு இன்றே தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யா டெல்லி உள்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிட்டது. மாநில பணியில் இருக்கும் ஒருவரை, அதுவும் தலைமை செயலாளர் ஒருவரை இப்படி மத்திய அரசு டெல்லிக்கு அழைத்து பெரிய சர்ச்சையானது.
சர்ச்சை
ஆலன் பந்தோபத்யா இன்றுடன் ஓய்வு பெற வேண்டும். ஆனால் மேற்கு வங்க மாநில அரசு இவரை மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்து, ஆகஸ்ட் 31 வரை வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. கடந்த மே 24ம் தேதி இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் இன்றே டெல்லிக்கு ஆலன் பந்தோபத்யா திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு செக் வைத்தது.
முடியாது
ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி, ஆலன் பந்தோபத்யாவை டெல்லிக்கு அனுப்ப முடியாது. இங்கு கொரோனா, யாஸ்ஸ் புயல் என்று நிலைமை சரியில்லை. என்ன நடந்தாலும் ஆலன் பந்தோபத்யாவை டெல்லிக்கு அனுப்பி முடியாது. தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாவை டெல்லிக்கு அழைப்பது தவறான உதாரணமாகும், இதற்கு முன் இப்படி நடந்தது கிடையாது.
கடிதம்
சட்ட ரீதியாக இது முறைகேடானது. என்ன நடந்தாலும் இவரை டெல்லிக்கு என்னால் அனுப்ப முடியாது. அவர் மாநில பணியிலேயே தொடர்வார் என்று மம்தா பானர்ஜி மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆலன் பந்தோபத்யாவும் இன்று டெல்லி செல்ல வேண்டிய நிலையில், மத்திய அரசின் அழைப்பை ஏற்காமல், கொல்கத்தாவிலேயே மாநில அரசின் கூட்டங்களில் கலந்து கொண்டார்.
ஓய்வு
இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ஆலன் பந்தோபத்யா திடீரென இன்று ஓய்வு பெற்றார். ஆலன் பந்தோபத்யா டெல்லியில் ஆஜராக வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில் இன்று அவர் ஓய்வு பெற்றார். மூன்று மாதம் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் இன்று அவர் ஓய்வு பெற்றார்.
பணி
மத்திய அரசு பணிக்கு செல்ல விருப்பம் இன்றி அவர் ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது. இன்று ஓய்வு பெற்ற ஆலன் பந்தோபத்யா மம்தா பானர்ஜியின் தனிப்பட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பணியில் இவரின் சேவை அவசியம் என்பதால் ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மேற்கு வங்க அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம்
இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் புதிய தலைமை செயலாளராக எச்கே திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் உள்துறை செயலாளராக பிபி கோபாலிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.