அச்சுறுத்தும் திரிணாமுல் கட்சியினர்.. மேற்கு வங்கத்தில் உச்சகட்ட வன்முறை! மக்கள் அச்சம்!
கொல்கத்தா: பெரும் பதற்றத்திற்கு நடுவே நடந்து முடிந்திருக்கும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை மறுநாள் எண்ணப்பட இருக்கின்றன. இந்நிலையில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஃபால்டா பகுதியில் ஏற்பட்டிருக்கும் வன்முறை மக்களை அச்சமடைய செய்திருக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அச்சுறுத்துவதாகவும், பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் கூறி, அப்பகுதி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஃபால்டா பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தங்களை மிரட்டுவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் கூறி சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், உங்கள் வீடுகள் எரிக்கப்படும், ரத்த ஆறு ஓடும் என திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் இஸ்ராஃபில் சௌகிதார் மிரட்டியதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். “நாங்கள் டிஎம்சிக்கு தான் வாக்களித்தோம், இருந்தும் அவர்கள் எங்களைத் தாக்குகிறார்கள். எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்” என்று அப்பகுதி பெண்கள் பதற்றத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மட்டுமல்லாது தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அப்பகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிஆர்பிஎஃப் மற்றும் ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் (RAF) வீரர்கள் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க சிஆர்பிஎஃப்-ன் கவச வாகனங்கள் வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக டைமண்ட் ஹார்பர் மற்றும் மக்ரஹாட் பஸ்சிம் ஆகிய தொகுதிகளில் உள்ள 15 பூத்களில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி, மக்ரஹாட் பஸ்சிம் தொகுதியில் 72.50% மற்றும் டைமண்ட் ஹார்பரில் 72.36% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இப்படி இருக்கையில் தற்போது நடைபெற்றிருக்கும் வன்முறை, மேற்கு வங்கத்தில் புதிய அச்சுறுத்தலை ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications