மேற்கு வங்க ரயில் விபத்து! உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு! நிகழ்விடத்தில் ரயில்வே அமைச்சர் ஆய்வு!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பைகேனரில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி நோக்கிச் சென்ற விரைவு ரயில் மேற்கு வங்கம் மாநிலம் தோமஹானி பகுதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் ரயிலின் 12 பெட்டிகளும் மொத்தமாக தடம் புரண்டதால் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்ததோடு 4 பேர் உயிரிழந்தனர்.

தற்போது நேரம் செல்ல செல்ல ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பலி எண்ணிக்கை 4-ல் இருந்து 9-ஆக உயர்ந்துள்ள சூழலில், விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், விபத்து பற்றி விசாரிக்க குழு அமைக்க உத்தரவிட்டார்.
மேலும், ரயில் விபத்து மீட்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் அலைபேசி மூலம் விளக்கி வருவதாகவும் ரயில் தடம் புரண்டது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தீவிர கவனம் செலுத்தி நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து நலம்பெற வாழ்த்துவதாக கூறியிருக்கிறார்.

இதனிடையே ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 இழப்பீடு தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக இருந்த நிலையில், தற்போது 50-க்கும் மேல் அந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications