நம்பிக்கை துரோகம்! வாய்ப்பே இல்லை.. என்னால் முடியாது! காங். தலைவர் தேர்தல்.. ஓப்பனாக விளாசிய கெலாட்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த வாரம் ஏற்பட்ட குழப்பம் பரபரப்பைக் கிளப்பி இருந்த நிலையில், இது தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக். 17ஆம் தேதி நடைபெற உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் தேர்தலில், சசி தரூர் களமிறங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
மறுபுறம் சோனியா காந்திக்கு நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவரான அசோக் கெலாட்டும் இந்தத் தேர்தலில் களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், கடைசி நேரத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டது.
பொன்னியின் செல்வன் எஃபெக்ட்! சோழ மன்னர்களின் பெயர் கொண்டவரா நீங்க? கவுரவிக்கும் ஹக்கீம் பிரியாணி!
காங்கிரஸ்
காங்கிரஸில் இருக்கும் ஒருவருக்கு ஒரு பதவி காரணமாக அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக இளம் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட்டை முதல்வராக்க அவர்கள் திட்டமிட்டனர். இருப்பினும் இதற்கு ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு கெலாட் அரசைக் கவிழ்க்க முயன்றவரை எப்படி ஏற்க முடியும் என்று விமர்சித்தனர்.
போர்க்கொடி
தங்கள் எதிர்ப்பை தாண்டி சச்சின் பைலட்டை முதல்வராக நியமித்தால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வோம் என்றும் சுமார் 90க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வேறு வழியின்றி அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து பின் வாங்கினார். அவருக்குப் பதிலாக மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு தாக்கல் செய்தார்.
அசோக் கெலாட்
இந்தச் சூழலில் ராஜஸ்தான் குழப்பம் தொடர்பாக அசோக் கெலாட் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ராஜஸ்தான் முதல்வராக என்னை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிப்பது தொடர்பாகத் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். நான் எனது வேலையைச் செய்து வருகிறேன். இறுதி முடிவைத் தலைமை தான் எடுக்க வேண்டும். நான் தலைமைக்குக் கட்டுப்பட்டவன்.
துரோகம் செய்ய மாட்டேன்
சில காலத்திற்கு முன்பு, எங்கள் எம்எல்ஏக்கள் சிலர் அமித் ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பாஜக தலைவர்களைச் சந்தித்தனர். எங்கள் எம்எல்ஏக்களுக்கு அமித் ஷா இனிப்பு எல்லாம் கூட வழங்கினார். அந்தச் சமயத்தில் காங்கிரஸ் அரசைக் காப்பாற்றியவர்கள் இந்த 102 எம்எல்ஏக்கள் தான். அவர்களை எப்படி மறக்க முடியும். அவர்களுக்கு எப்படி என்னால் துரோகம் செய்ய முடியும்.
மக்கள் ஆதரவு
எனக்குத் தேவைப்படும் போதெல்லாம் எனக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.. இரு ஆண்டுகளுக்கு முன்பு எனது அரசைக் கவிழ்க்க முயன்ற போதும் சரி, கொரோனா காலத்திலும் சரி எனக்கு மக்கள் ஆதரவு அளித்து உள்ளனர். எனது கடைசி மூச்சு உள்ளவரை நான் ராஜஸ்தான் மக்கள் பக்கம் தான் இருப்பேன். அவர்களுக்காகத் தான் அரசியலில் நான் இருக்கிறேன். அவர்களையும் என்னால் மறக்க முடியாது.
விசாரிக்க வேண்டும்
மாநிலத்திற்கு புதிய முதல்வராக நியமிக்கலாம் என்று சிலரது பெயர்களை பரீசலனை செய்யும் போதே, எம்எல்ஏக்கள் கோபமடைந்தனர். அவர்கள் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என எனக்குத் தெரியாது. யார் மீது எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்தனர் என்பது குறித்தும் அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். அது தான் கட்சிக்கு நல்லது" என்று அவர் சச்சின் பைலட்டை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார்.
ராஜஸ்தான் குழப்பம்
கடந்த 2020ஆம் ஆண்டு ராஜஸ்தானில் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டது. கெலாட் அரசுக்கு எதிராக அப்போது துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலரும் டெல்லி சென்றனர். இதனால் கெலாட் அரசுக்குக் கவிழும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும், சில வாரங்களில் இரு பிரிவுகளும் மீண்டும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.