அமைச்சரின் பலான வீடியோ போடுவேன்னு நான் எப்போ சொன்னேன்? அந்தர் பல்டியடித்த கர்நாடக பெண் டிஎஸ்பி
பெங்களூர்: பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கர்நாடக பெண் டிஎஸ்பி அனுபமா ஷெனாய் இன்று தனது வீடு திரும்பினார்.
பேஸ்புக்கில் அமைச்சர் குறித்து முக்கிய தகவல் வெளியிட போவதாக கூறியிருந்தது குறித்த கேள்விக்கு, அப்படி எதுவும் தான் போஸ்ட் போடவில்லை என்றும், பேஸ்புக்கை யாராவது ஹேக் செய்திருக்கலாம் என்றும் கூலாக பதில் கூறினார் அனுபமா ஷெனாய்.
பெல்லாரி மாவட்டம் கூட்லகியில் டிஎஸ்பியாக பணியாற்றிய அனுபமா ஷெனாய் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார். சாராய லாபியோடு சேர்ந்துகொண்டு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் பரமேஸ்வர் நாயக் கொடுத்த நெருக்கடிதான், ராஜினாமாவுக்கு காரணம் என்று தகவல் வெளியாகியிருந்தது.
இதனிடையே ராஜினாமா செய்த கையோடு தலைமறைவானார் அனுபமா ஷெனாய். பரமேஸ்வர் நாயக் பற்றி இரவில் பார்க்க கூடிய வகையிலான வீடியோ இருப்பதாகவும் அதை வெளியிட போவதாகவும் அனுபமா ஷெனாயின் பேஸ்புக்கில் நேற்றுமுன்தினம் வெளியான போஸ்ட் மாநிலம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று பெல்லாரியிலிலுள்ள தனது வீட்டுக்கு அனுபமா ஷெனாய் திரும்பினார். அவரிடம் நிருபர்கள் கேள்விக் கணைகளை தொடுத்தனர். அனுபமா ஷெனாய் கூறுகையில், நான் மீடியாக்களிடம் இப்போது பேச விரும்பவில்லை. எனது ராஜினாமா கடிதத்தை காவல்துறை இன்னும் ஏற்காத சூழ்நிலையில், மீடியாக்களிடம் பேசுவது சிக்கலை அதிகப்படுத்தும் என்றார்.
பேஸ்புக் பதிவு குறித்து நிருபர்கள் கேட்டபோது, எந்த பேஸ்புக் என்று கேட்டு ஷாக் கொடுத்தார் அனுபமா ஷெனாய். தான் அவ்வாறு எந்த போஸ்டையும் போடவில்லை என்றும், யாராவது தனது அக்கவுண்டை ஹேக் செய்து போஸ்ட் செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இங்கே என்ன நடக்கிறது என்பது புரியாமல் விழித்தனர் நிருபர்கள்.