வெறும் சில நிமிடங்கள்தான்! அப்படியே அறுந்து விழுந்த மோர்பி பாலம்! விபத்திற்கு என்ன காரணம்! பரபர தகவல்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து மோசமான விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்து தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் நேற்று மாலை யாரும் எதிர்பார்க்காத வகையில் மிக மோசமான விபத்து நடந்தது. சமீப காலங்களில் நடந்த விபத்துகளில் மிகப் பெரிய விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக ஆற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேர் ஆற்றில் விழுந்தனர். அவர்களை மீட்கும் பணிகள் விடிய விடிய மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குஜராத்
குஜராத் மாநிலத்தில் மோர்பி நகர்ப் பகுதியில் மச்சு என்ற ஒரு ஆறு ஓடுகிறது. பிரிட்டிஷ்ஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில் இந்த பாலத்தை எளிதாகக் கடக்கும் வகையில் கேபிள் பாலம் ஒன்றை அமைத்தனர். அந்த பாலத்தைப் பொதுமக்கள் இன்றும் கூட பயன்படுத்தி வருகின்றனர். இடையே சில மாதங்கள் இந்த பாலம் புனரமைப்பு பணிகளுக்காக மூடியது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தான் இந்த பாலத்தை அம்மாநில அரசு மீண்டும் திறந்து இருந்தது.

மோர்பி தொங்கு பாலம்
இந்தச் சூழலில் தான் மிக மோசமான இந்த விபத்து அரங்கேறி உள்ளது. நேற்று மாலை நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலத்தின் மீது இருந்த போது திடீரென இந்த பாலத்தின் கேபிள் அறுந்து விழுந்து இந்த மோசமான விபத்து ஏற்பட்டது. விடிய விடிய அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்திற்கு முற்றிலுமாக பொறுப்பேற்பதாக அறிவித்து உள்ளார். குஜராத் செல்லவிருந்த பிரதமர் மோடியும் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

நிவாரண நிதி
மேலும், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதேபோல காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். விபத்தில் காயமடைந்தோரை மீட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும், குஜராத் மாநில அரசு சார்பிலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு உள்ளது.

என்ன காரணம்
விபத்தில் சிக்கியவர்களை முழுமையாக மீட்ட பின்பு இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும். இதனிடையே விபத்திற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் அதில் இருந்தது விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். நேற்று விடுமுறை நாள் என்பதால் பாலத்தின் மீது பல நூறு பேர் குவிந்தனர். மிகப் பழமையான அந்த பாலம் அதிகப்படியான எடையைத் தாங்க முடியாமல் அறுந்து விழுந்து இருக்கலாம்.

அதிகப்படியான மக்கள்
பாலம் கடந்த அக். 26ஆம் தேதி தான் குஜராத் புத்தாண்டை முன்னிட்டு ஆறு மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்டது. தி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி, அந்த பாலத்திற்கு எவ்வித தரச்சான்றும் இல்லாமல் திறக்கப்பட்டதாகக் கூறப்பட்டு உள்ளது. அப்படியிருக்கும் புது அதிகப்படியான மக்கள் அங்குச் சேர்ந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் இது முக்கிய காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. கேபிள் அறுந்ததில் சில நிமிடங்களில் பாலம் அப்படியே ஆற்றில் விழுந்ததாக இதை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

எப்போது கட்டப்பட்டது.
'தொங்கு பாலம்' என்று அழைக்கப்படும் இந்த பாலம் 230 மீட்டர் நீளமுடையது. பிரிட்டிஷ் ஆட்சியில் 19 ஆம் நூற்றாண்டில் இந்த பாலம் கட்டப்பட்டது. கடந்த 1879 பிப்ரவரி 20இல் இந்த பாலம் அப்போதைய மும்பை கவர்னர் ரிச்சர்ட் டெம்பிள் என்பவரால் திறக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் பாதுகாப்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications