'வாட்ஸ் ஆப்'-க்கு இந்தியாவில் விரைவில் தடை?
டெல்லி: வாட்ஸ் ஆப் அண்மையில் மிகவும் பாதுகாப்பான ரகசிய தகவல் பரிமாற்றத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் 'வாட்ஸ் ஆப்'-க்கு மத்திய அரசு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை யாரும் கண்காணிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் அண்மையில் வாட்ஸ் ஆப் பயன்பட்டாளர்கள் தற்போது தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை வேறு எவருமே கண்காணிக்க முடியாத புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டாளர்களின் அழைப்புகள், தகவல்களை ஹேக்கர்கள் எதுவுமே செய்ய முடியாத பாதுகாப்பு அம்சம் இது என்கிறது வாட்ஸ் ஆப். அத்துடன் தாங்களே நினைத்தாலும் கூட இந்த தகவல்களைப் பார்க்க முடியாத அளவுக்கு 256 பிட் கீ என்கிரிப்சன் முறை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்றது வாட்ஸ் ஆப் நிறுவனம்.
இப்படி மிகவும் பாதுகாப்பான ஒருமுறையை நடைமுறைப்படுத்தும் முன்னர் இந்தியாவில் மத்திய அரசின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் அப்படி எந்த ஒரு அனுமதியையும் பெறவில்லை.
ஏனெனில் இத்தகைய மிகவும் பாதுகாப்பான அம்சங்களை தீவிரவாதிகள் பயன்படுத்தினால் இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானதாக அமைந்துவிடும். ஆகையால் வாட்ஸ் ஆப் பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடை செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.