யார் இந்த சென்டினல் பழங்குடியினர்.. ஆச்சரியம் தரும் அந்தமான் தீவு அதிசய மனிதர்கள்!
Recommended Video
போர்ட் பிளேர் : இந்தியாவிலேயே தனித்து விடப்பட்ட தீவுகளில் வடக்கு சென்டினல் தீவும் ஒன்றாகும். இங்குள்ள ஆதிவாசிகள் யாரையும் அவர்கள் எல்லைக்குள் சேர்ப்பதில்லை. அதையும் மீறி சென்றவர்களை அவர்கள் கொன்றுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பர்.
அத்தகைய தீவில் அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஆலன் சாவ் என்ற மதபோதகர் கிறிஸ்துவ மதம் குறித்து போதனை செய்யவும் அவர்களை அந்த மதத்திற்கு மாற முயற்சிக்கவும் சென்றிருந்தார். ஆனால் அவரை அம்பை எய்து கொன்று மண்ணில் போட்டு புதைத்து விட்டனர்.
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்த பகுதிக்கு தன்னை அழைத்து செல்ல ஜான் 6 மீனர்களுக்கு கூடுதல் பணம் கொடுத்தார். அமெரிக்கர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்டினிலியர் மக்கள் குறித்து சில வியத்தகு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
8000 பேர்
சென்டினல் ஆதிவாசிகள் வங்க கடல் அருகே உள்ள அந்தமான் தீவில் வடக்கு சென்டினல் தீவில் வசித்து வரும் ஆபத்தான ஆதிவாசிகளாவர்.18-ஆவது நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது 8000 பேர் வசித்து வந்தனர். ஆனால் தற்போதோ 150 முதல் 50 பேர் வரை மட்டுமே வசித்து வருகின்றனர்.
எதிரிகள்
இந்த பகுதிக்கு செல்ல இந்திய அரசும் சட்டமும் யாரையும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் ஆதிவாசிகள் தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்ளாமலேயே வாழ்ந்து வருவதால் அவர்களிடம் இருந்து எளிதில் நோய் தொற்றும் அபாயம் உள்ளது. அந்தமானில் வசித்து வரும் ஆதிவாசிகளை காட்டிலும் சென்டினல் தீவு ஆதிவாசிகள் வெளியாட்களை எதிரிகளாகவே பார்க்கின்றனர்.
என்ன உணவு
எந்த ஒரு நபரையும் தங்கள் தீவுக்கு 3 மைல் தொலைவில் கூட இவர்கள் அனுமதிப்பதில்லை. உணவை உண்ண அடிப்படையான நடைமுறைகளையே பயன்படுத்துகின்றனர். வில், அம்பு கொண்டு விலங்குகளை வேட்டையாடி, கடல் உணவு மற்றும் நண்டுகளை உண்டு உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
பார்ப்பதற்கு அச்சு அசலாக
இந்த ஆதிவாசிகளுக்கு நெருப்பை பற்ற வைக்கக் கூட தெரியாது. இவர்கள் பேசும் மொழியை மொழி பெயர்க்க யாரும் இல்லை. இவர்களின் தோற்றம் பார்ப்பதற்கு சென்டினல் தீவுக்கு பக்கத்தில் உள்ள ஜராவா தீவினர் போல் உள்ளனர். கடந்த 1967- 1991-ஆம் ஆண்டு வரை தமிழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் அவர்களை சந்திக்க சென்றார். ஆனால் முடியவில்லை.
இணைக்க முயற்சி
1974-ஆம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபிக் டீம் மானுடவியலாளர்களுடன் சேர்ந்து சென்றனர். அப்போது அந்த சேனலின் இயக்குநரின் காலில் ஆதிவாசிகள் அம்பை எய்தினர். இந்திய அரசும் இத்தகை ஆபத்தான இந்த தீவை இணைக்க முயற்சித்து வருகிறது.
தாக்குதல்
கடந்த 2004-ஆம் ஆண்டு அந்தமான் தீவுகளில் சுனாமியின்போது அந்த தீவு பாதிக்கப்பட்டுள்ளதாக என இந்திய கடலோர காவல் படையின் ஹெலிகாப்டரில் அப்பகுதியில் சுற்றியது. இதையடுத்து ஆதிவாசிகள் அந்த ஹெலிகாப்டர் மீது அம்புகளை எய்தினர். இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் திரும்பி சென்றது.