365 பெண்களோடு டேட்டிங்.. அனைத்து வயது வரம்பு பெண்களோடும் இவர் ஏன் டேட்டிங் செல்கிறார்?
தமிழ் நடிகர், தொழில்முறை நடனக் கலைஞர் மற்றும் புகைப்படக் கலைஞர் சுந்தர் ராமு கடந்த சில ஆண்டுகளில் 335 பெண்களோடு டேட்டிங் சென்றுள்ளார். ஆனால் 365 டேட்டிங் செல்ல வேண்டும் என்கிற தனது இலக்கை அடைய இன்னும் 30 குறைவாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
அவர் விவாகரத்தானவர். ஆயினும் "காதலை வெறுக்கவில்லை" என்கிறார் அவர். அவருடைய டேட்டிங்கள் அனைத்தும் ரொமாண்டிக் ஆனவை அல்ல. அவருடைய குறிக்கோள் காதலை கண்டுபிடிப்பது மட்டுமே கிடையாது.
"நான் மிகவும் ரொமான்டிக் ஆனவன். நான் ஒவ்வொரு நாளும் காதலைத் தேடுகிறேன், ஆனால் 365 டேட்டிங்களுக்கு பின்னால் உள்ள சிந்தனை, பெண்களை சந்திப்பதற்கானது மட்டுமல்ல," என்று சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து பிபிசியிடம் அவர் கூறினார்.
"இந்தியாவில் பெண்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தான் இந்த முயற்சி," என அவர் கூறுகிறார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு தமிழ் மற்றும் மலையாள படங்களில் நுழைவதற்கு முன்பு, அவர் நாடக நடிகராக இருந்தார். 2015 ஜனவரி 1 ஆம் தேதி அவர் இந்த திட்டத்தை தொடங்கினார்.
அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தேடியபோது, அவர் டேட்டிங் சென்ற பெண்களின் கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன. அவரது 105 வயது பாட்டி, அவரது அபார்ட்மெண்ட் பிளாக்கில் இருந்து குப்பை சேகரிக்கும் ஒரு பெண், 90 வயதில் ஒரு அயர்லாந்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, ஒரு நடிகை, மாடல்கள், ஒரு யோகா ஆசிரியர், ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என பலரோடு அவர் டேட்டிங் சென்றிருக்கிறார்.
"பெண்கள் மதிக்கப்பட்டு நன்றாக நடத்தப்பட்ட ஒரு குடும்பத்தில் நான் வளர்ந்தேன். மேலும் நான் பாலின பாகுபாடு காட்டப்படாத ஒரு பள்ளிக்குச் சென்றேன். அங்கு சிறுவர் மற்றும் சிறுமிகள் வித்தியாசமானவர்களாக கருதப்படவில்லை. ஆனால் வெளியுலகைப் பார்த்தபோது, பாலின பாகுபாடுகள் வேரூன்றி இருப்பதை நான் கண்டேன். கலாசாரத்தை பொருத்தவரை அது எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது," என்கிறார் அவர்.
2012 டிசம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் ஒரு 23 வயது மாணவி பேருந்தில் கொடூரமாக தாக்கப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சம்பவம் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
"இந்த சம்பவம் என் வயிற்றை கலக்கியது. என்னால் பல இரவுகளில் தூங்க முடியவில்லை," என்கிறார் அவர்.
வெளிநாடுகளில் விடுமுறைக்கு செல்லும்போது மக்கள் அவரிடம், "இந்தியர்கள் ஏன் பெண்களை மிகவும் மோசமாக நடத்துகிறார்கள்" என்று கேட்ட போது அது அவரது மனதை சுட்டது.
"சமூகத்தை சரிசெய்வது என்பது, அரசு அல்லது என்ஜிஓக்கள் போன்ற வேறொருவரின் வேலை என்று நாம் எப்போதும் நினைக்கிறோம். ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன்,".
அப்போதுதான் 365 டேட்களின் யோசனை வந்தது.
"ஆண்களும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அவர்கள் டேட்டிங் செய்யும்போது அவர்களுக்கு நிறைய தவறான புரிதல்கள் உள்ளன. பெண்கள் என்பவர்கள் வெறும் அழகான கால்கள் மற்றும் வளைவுகளைக் கொண்டவர்கள் மட்டுமல்ல. ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்."
- உலகத்தால் கைவிடப்படும் ஆப்கானிஸ்தான் - போர்க்களத்தில் இருந்து ஒரு இந்திய பெண் செய்தியாளரின் பார்வை
- மூலிகையே மூலதனம்: பெண்களை தொழில் முனைவோர் ஆக்கும் பார்வதியின் கதை
"எனது டேட்டுகளுடனான உரையாடல்களை எழுதுவதன் மூலம் நான் மக்களிடம் சொல்ல முயன்றது என்னவென்றால், உங்களை மற்ற பாலினத்தின் இடத்தில் வைத்துப்பாருங்கள், அவர்களின் பிரச்சனைகளை நீங்கள் இன்னும் நன்றாக புரிந்துகொள்வீர்கள் என்பதுதான்," என்கிறார் சுந்தர்.
சுந்தர் ராமு 365 டேட்டிங் திட்டத்தை, 2014 டிசம்பர் 31 ஆம் தேதி ஃபேஸ்புக்கில் அறிவித்தார்.
"பெண்கள் என்னிடம் வெளியே வருகிறீர்களா என்று கேட்கவேண்டும், திட்டமிட வேண்டும், ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும், உணவிற்கு பணம் கொடுக்கவேண்டும் அல்லது சமைக்கவேண்டும்," என்று அவர் எழுதினார்.
உணவில் சேமித்த பணத்தை, அதிகம் வெளியே தெரியாத தொண்டு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் தான் அளிக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சில நிமிடங்களில் ஒரு நண்பர் புத்தாண்டு தினத்தன்று மதிய உணவு டேட்டிங்குக்கு அவரை அழைத்தார்.
அவரது முதல் ஒரு டஜன் டேட்டிங்குகள் தெரிந்தவர்களுடன் இருந்தன. 10 வது டேட்டிங் செல்வதற்குள் உள்ளூர் பத்திரிகைகள் அவரது கதையை எழுதின. இதன்காரணமாக மேலும் பல அழைப்புகள் வந்தன. அவர் "தி டேட்டிங் கிங்", "365-டேட்ஸ் மேன்" மற்றும் "சீரியல் டேட்டர்" என்ற பெயர்கள் அவருக்கு சூட்டப்பட்டன.
நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இன்னும் நடைமுறையில் இருக்கும் ஒரு நாட்டில் டேட்டிங் என்பது ஒரு "மேற்கத்திய இறக்குமதி" கலாச்சாரம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் அவருடைய நண்பர்கள் இந்தத்திட்டத்தால் " அருவெறுப்புடன் கூடிய கோபத்தை" காட்டினர்.
"உங்களுக்கு நிறைய பெண்களைத் தெரியும் என்று காட்ட முயற்சிக்கிறீர்களா? உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்கள் ஒரு பிளேபாய் போல் இருக்கிறீர்கள்" என்று அவர்கள் சுந்தர் ராமுவை கண்டித்தனர்.
"ஆனால் மற்றவர்கள் பார்ப்பதற்காகவே நான் இதை செய்கிறேன். ஒரு உரையாடலைத் தொடங்குவது, கேள்விகளைக் கேட்பது, மற்றொரு நபரின் கண்ணோட்டத்தை தெரிந்துகொள்வதே இதன் நோக்கம் என்று நான் அவர்களிடம் கூறினேன். எனது இறுதி நோக்கம் பாலின சமத்துவத்தை அடைவதாகும், "என குறிப்பிட்டார்.
இந்தத்திட்டம் தொடங்கியதிலிருந்து சுந்தர் ராமு, பல நாடுகளைச் சேர்ந்த பெண்களுடன் டேட்டிங் செய்துள்ளார். பல்வேறு இந்திய நகரங்களிலும், வியட்நாம், ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து, இலங்கையிலும் தனது டேட்டிங் சென்றுள்ளார்.
அவர் தனது ஒவ்வொரு டேட்டிங்கும் "தனிச்சிறப்பு வாய்ந்தது" என விவரிக்கிறார். ஆயினும், 109 ஆவது வயதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமான தன் பாட்டியுடனான 'டேட்டிங்' அற்புதமானது என்று அவர் வர்ணிக்கிறார்.
"ஒரு மெர்சிடிஸில் சவாரி செய்ய விரும்புவதாக பாட்டி சொல்வதை கேட்டு வளர்ந்தவன் நான். அதனால், நான் ஒரு மெர்சிடிஸை வாங்கி குள்ளஞ்சாவடி கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்று பாட்டியை அழைத்து வந்தேன். என் தாத்தா இறந்ததிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாக, வாக்களிக்க செல்வதைத் தவிர அவர் வீட்டைவிட்டு வெளியே வேறு எங்கும் சென்றதில்லை. காரில் உள்ளூர் கோவிலுக்குச் சென்ற பிறகு, சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க ஒரு ஏரிக்கரைக்கு நாங்கள் சென்றோம்."
"வயது காரணமாக அவரின் முதுகு சிறிது வளைந்திருந்தது. ஆனால் மற்றபடி அவருடைய உடல்நிலை சரியாக இருந்தது. நாங்கள் ஒரே போன்ற கறுப்புக்கண்ணாடிகளை அணிந்திருந்தோம். தான் கொஞ்சம் இளமையாக இருந்திருந்தால், என் இளம் டேட்டிங்களோடு போட்டி போட்டிருப்பேன் என்று பாட்டி, சிரித்துக்கொண்டே கூறினார்," என்று சுந்தர் ராமு குறிப்பிட்டார்.
"அவர் என் பாட்டிதான். ஆனால் நான் அவருடன் தனியாக இத்தனை நேரம் செலவழித்தது அதுவே முதல் முறை. அந்த டேட் இல்லையென்றால் நான் அவருடன் இந்த உரையாடலை நடத்தியிருக்க முடியாது என்பதை அப்போது உணர்ந்தேன்."
சென்னையில் உள்ள ஒரு கான்வென்ட்டில் அயர்லாந்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி லோரெட்டோவுடன் அவர் உணவைப் பகிர்ந்து கொண்டார்.
"அவருக்கு வயது 90-க்கு மேல் இருக்கும். அது தன்னுடைய முதல் டேட் என்று என்னிடம் அவர் கூறினார். தான் ஒன்பது வயதில் தேவாலயத்தில் சேர இந்தியா வந்ததாக அவர் குறிப்பிட்டார்."
சுந்தர் ராமு ஆரம்பத்தில் ஒரு வருடத்தில் 365 டேட்டுகளுக்கு செல்ல விரும்பியதாகக் கூறினார். ஆனால் 2015 நவம்பரில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளம், சென்னையின் பல பகுதிகளை மூழ்கடித்தது. அடுத்த ஆண்டு அவர் இந்தத்திட்டத்தை மீண்டும் தொடங்கினார். ஆனால் அதை வேகப்படுத்த முடிவு செய்தார்.
"நான் நிறைய அழகான பெண்களுடன் நிறைய இலவச உணவு சாப்பிட்டேன். இப்போது இது ஒரு வாழ்நாள் திட்டமாகிவிட்டது. இந்தப் பேச்சு தொடர வேண்டும் என்பதுதான் என் லட்சியம்,"என்கிறார் அவர்.
அவர் தனது திட்டத்தை தொடங்கிய நேரத்தை விட இப்போது அதிக பாலின சமத்துவம் உள்ளது என்று அவர் நினைக்கிறாரா என்று நான் அவரிடம் கேட்டேன்.
"நான் மிகவும் சலுகை பெற்ற இடத்திலிருந்து வருகிறேன். ஆனால் ஆணாதிக்கத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு நாட்டையும் சமூகத்தையும் என்னால் மாற்ற முடியும் என்று நான் நினைத்தால், அது கேலிக்குரியதாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார்.
"ஆனால் எங்காவது ஒரு ஆரம்பம் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரே இரவில் நடக்கக்கூடியது அல்ல. இதற்கு விரைவான தீர்வும் இல்லை. அதற்கு சில தலைமுறைகள் ஆகக்கூடும். ஆனால் நாம் நம் வாழ்நாளில் தொடங்கி அதைத் தொடர வேண்டும்." எனக் கூறினார் சுந்தர்.
பிற செய்திகள்:
- பல சாதிகளை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமனம்: இதற்கு தமிழ்நாடு எதிர்கொண்ட சவால்கள் என்ன?
- முக்கிய சீனத் துறைமுகத்தில் கோவிட்-19 தொற்று கண்டுபிடிப்பு: உலக வணிகத்துக்கு அச்சுறுத்தல்
- இது செல்போனா? கீ செயினா? மடக்கும் வசதி ஸ்மார்ட்ஃபோன்களோடு களமிறங்கும் சாம்சங்
- கோவை தலித் அரசு ஊழியர் காலில் விழுந்தது ஏன்? புதிய வீடியோ காட்டும் தலைகீழ் திருப்பம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?














Click it and Unblock the Notifications