நிர்மலா சீதாராமன் திடீரென பிரான்ஸ் சென்றது ஏன்?.. நிறைய சந்தேகம் வருகிறது.. ராகுல் கேள்வி!
ரபேல் ஒப்பந்தம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்றது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்றது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.
இதில் 12 ஆயிரம் கோடி இழப்பும், பல ஆயிரம் கோடி ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மேலும் இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி பெயரும் சிக்கி இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் இருந்து பாஜக அரசு வாங்கிய ரபேல் ரக விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.
பிரான்ஸ் சென்றார்
இந்த நிலையில்தான் நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் பயணமாகி பிரான்ஸ் சென்றார். அங்கு பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்தார். அதோடு ரபேல் விமானத்தை வழங்க போகும் டஸால்ட் நிறுவன தலைமையகத்திற்கும் சென்று வந்தார்.
[ஐஎன்எக்ஸ் வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை ]
சந்தேகம் வருகிறது
இந்த நிலையில் இந்த பயணம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரபேல் குற்றச்சாட்டு உச்சத்தில் இருக்கும் சமயத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் இப்படி பிரான்ஸ் செல்வது கண்டனத்திற்கு உரியது. முக்கியமாக டஸால்ட் நிறுவன தலைமையகத்திற்கும் அவர் சென்று வந்தது நிறைய சந்தேகங்களை வரவைக்கிறது என்றுள்ளார்.
எப்படி நடக்கிறது
மேலும், நிர்மலா சீதாராமன் சென்று வந்த உடன், அரசு கட்டாயத்தின் பேரில் ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்க்கவில்லை. விருப்பப்பட்டுதான் சேர்த்தோம் என்று டஸால்ட் நிறுவனம் பேச்சை மாற்றுகிறது. நிர்மலா சீதாராமன் சொல்லித்தான் இப்படி பேச்சை மாற்றி பேசுகிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது. ஒன்றுமே இல்லாத அம்பானி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைக்க பாஜக கஷ்டப்பட்டு உழைத்துள்ளது.
மோடி பிரதமர்
பிரதமர் மோடி அனில் அம்பானியின் பாக்கெட்டில் பணத்தை நிரப்ப உழைத்து வருகிறார். மோடி இந்தியாவின் பிரதமர் அல்ல, அம்பானியின் பிரதமர். இதில் ஊழல் நடந்து இருக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும். அம்பானியின் பாக்கெட்டில் 36 ஆயிரம் கோடியை நிரப்பவே மோடி உழைத்து வருகிறார் என்றுள்ளார்.