கத்துவா.. உன்னோவ்.. சூரத்.. அதிகரிக்கும் வன்புணர்வு கலாச்சாரம்.. பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் இப்படி?
சமீப காலங்களில் இந்தியா முழுக்க பாலியல் வன்புணர்வு கலாச்சாரம் அதிகரித்து இருக்கிறது.
Recommended Video
டெல்லி: சமீப காலங்களில் இந்தியா முழுக்க பாலியல் வன்புணர்வு கலாச்சாரம் அதிகரித்து இருக்கிறது. முக்கியமாக பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த பிரச்சனை மிகவும் அதிகமாகி உள்ளது.
இந்தியாவின் மொத்த எதிர்காலத்தையே இப்படிப்பட்ட சம்பவங்கள் பாதிக்கும் சமயத்தில் ஆளும் பாஜக கட்சி இதுகுறித்து குரல் கொடுக்காமல் இருக்கிறது. பாஜக கட்சியை சேர்ந்த சிலரும் இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அகண்ட பாரதம் அமைக்க வேண்டும் என்று பாஜக விருப்பப்பட்டு தேர்தலுக்காக வேலை செய்து வருகிறது. இவர்களின் அகண்ட பாரதத்தில் பெண்களுக்கு இடமே இல்லையா என்ற கேள்வியை சமீப கால சம்பவங்கள் எழுப்பி இருக்கிறது.
மூன்று சம்பவம்
காஷ்மீரில் நடந்த சம்பவம் இந்தியாவை உலுக்கிய பின்தான் வெளியே தெரிந்தது. அதேபோல் உன்னாவ் விவகாரமும், பாதிக்கப்பட்ட குடும்பம் ஆதித்யநாத் வீட்டில் சென்று தீக்குளிக்க முயன்ற பின்தான் வெளியே தெரிந்தது. இந்த நிலையில் பாஜக ஆளும் குஜராத்தின் சூரத்தில் 8 வயது சிறுமி கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்.
பாஜக
இந்த மூன்று சம்பவம் நடந்ததும் பாஜக ஆளும் மாநிலங்களிலும், பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களிலும்தான். அதேபோல் இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் என்று பார்த்தால் சிறுமிகள், இஸ்லாமியர்கள், தலித்துகள் மட்டும்தான். பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் சிறுபான்மையின பெண்கள் இவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
குரல்
இந்த சம்பவங்களுக்கு எதிராக பாஜக கட்சியினர் பெரிதாக குரல் கொடுக்கவில்லை. முக்கியமாக பாஜகவில் இருக்கும் பெண் தலைவர்கள் கூட இந்த மோசமான சம்பவங்களுக்கு எதிராக துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இதுவரை பாஜகவில் இருந்து மேனகாகாந்தி மட்டுமே இந்த சம்பவம் குறித்து குரல் கொடுத்துள்ளார்.
கட்சியினருக்கே தொடர்பு
இதில் இன்னமும் மோசமான விஷயம் என்னவென்றால், இதில் இரண்டு சம்பவங்களில் பாஜக கட்சியினருக்கே தொடர்புள்ளது. உத்தரபிரதேச சம்பவத்திற்கு காரணம் பாஜக எம்.எல்.ஏ குல்தீப். அதேபோல் காஷ்மீர் குழு வன்புணர்வை செய்தது பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த நபர்கள்தான். இதன் காரணமாகவே பாஜக கட்சியினர் இதுபற்றி பேசுவதில்லை.
இன்னும் மோசம்
ஆனால் பாஜக கட்சியினர் இப்படி அமைதியாக கூட இல்லாமல் இதை பற்றி மோசமாக பேசி இருக்கிறார்கள். டெல்லியில் நடந்த நிர்பயா கொடூரத்தை மிகவும் சிறிய விஷயம் என்று அருண் ஜெட்லீ குறிப்பிட்டார். கதவு இல்லாத கோவிலுக்குள் அந்த சிறுமி எப்படி இருந்தார் என்று காஷ்மீர் விவகாரத்தில் எச்.ராஜா வன்மமாக பேசியுள்ளார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.