மேற்கு வங்கம்.. சர்வே ஓகே.. ஆனா, வரப்போவது பாஜக ஆட்சிதான்? கவலையில் மம்தா பானர்ஜி.. காரணம் "இதுதான்"
கொல்கத்தா: தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறினால் கூட, ஆட்சியை அமைக்க முடியுமா என்ற அச்சத்தில் இருக்கிறார் மம்தா பானர்ஜி.
என்னாச்சு.. மேற்கு வங்க நிலவரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய எழுச்சி ஆகும்.
பாஜக அபார வாக்கு சதவீதம்
இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு அம்சம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 43.69 சதவீதம் வாக்குகளை பெற்றது. பாஜக பெற்ற வாக்குகள் சதவீதம் எவ்வளவு தெரியுமா? 40.64 ஆகும். அதாவது வாக்கு சதவீதம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அவ்வளவு பெரிய எழுச்சியை பெற்று உள்ளது பாஜக. சட்டசபை தேர்தலை 8 கட்டங்களாக எதிர்கொள்கிறது மேற்கு வங்கம். தொடர்ந்து 10 வருடங்களாக அங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே இயல்பாகவே மக்களிடம் ஆட்சிக்கு எதிரான மனநிலை இருக்கிறது.
மம்தா மனதில் சந்தேகங்கள்
இந்த நிலையில்தான், கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஏபிபி மற்றும் சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளில் நம்பர்-ஒன் கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தாலும்கூட மம்தா பானர்ஜி மனதில் ஏகப்பட்ட சந்தேகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
முதல் கருத்துக் கணிப்பு
ஜனவரி மாதம் ஏபிபி நியூஸ் மற்றும் சி ஓட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 154 முதல் 162 தொகுதிகள் வரை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதேநேரம் பாஜக 98 முதல் 106 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. 26 முதல் 34 தொகுதிகள் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிக்கு செல்லும் என்று அந்த கருத்துக் கணிப்பு அப்போது தெரிவித்து இருந்தது. ஆனால் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 148 முதல் 164 தொகுதிகள் செல்லக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாஜக 92 முதல் 102 சீட்டுகள் வரை வெல்லும் என்றும், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி 31 முதல் 39 தொகுதிகள் வரை வெல்ல கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பு
இந்த கருத்துக் கணிப்புகள் பழையவை. மார்ச் மாதம் லேட்டஸ்ட்டாக ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 150 முதல் 160 தொகுதிகள் வரை வெல்ல கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக வெல்லக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை 98 முதல் 114 வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, பாஜக செல்வாக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை விடவும் அதிகரித்துள்ளது என்பது இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சமாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிக்கு 23 முதல் 31 தொகுதிகள் கிடைக்கும் என்று, இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
பாஜக செல்வாக்கு
பாஜக செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை தான் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் பலரும் இனிமேல் மேற்குவங்கத்தில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட உள்ளனர். அப்போது பாஜகவுக்கு ஆதரவு அதிகரிக்கக் கூடும் என்பது மம்தா பானர்ஜியின் அச்சமாக இருக்கிறது.
பாஜக போராட்டம்
இன்னொரு பக்கம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் சிலரை பாஜக தங்கள் பக்கம் இழுத்துள்ளது. இதுவும் அந்த கட்சிக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால், புதிதாக வந்தவர்களுக்கு சீட் கொடுத்து விட்டார்கள் என்று பாஜக தொண்டர்கள் தங்கள் தலைமைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருவது மட்டும் மம்தா பானர்ஜிக்கு ஒரு பாசிட்டிவ் சிக்னலாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியாது என்பதுதான் மம்தா பானர்ஜி அச்சத்துக்குக் காரணம்.
டெல்லி உதாரணம்
கருத்துக் கணிப்புகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் முதலிடத்தை பிடிப்பது போல தெரிந்தாலும் புதிதாக வேகமாக எழுந்து வர கூடிய கட்சியாக பாஜக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அரசியல் விமர்சகர் பிரதீப் இதுபற்றி கூறுகையில், டெல்லியில் ஆம் ஆத்மி எழுச்சி பெற்று வெற்றி பெற்றபோது தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் அந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று யாருமே சொல்லவில்லை. ஆனால் எழுச்சி பெறுகிறது என்பது மட்டும் தெரிந்தது.
இதுதான் காரணம்
ஏனெனில் புதிதாக ஒரு கட்சி எழுச்சி பெற்று வரும் போது, தங்களை பேட்டி எடுக்கக் கூடிய கருத்துக்கணிப்பு எடுக்கும் நிறுவனங்களிடம் மக்கள் அது பற்றி வெளிப்படையாக சொல்வது கிடையாது. ஆனால், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. அதுபோன்ற சூழ்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார் அவர். இந்த விஷயம் தான் மம்தா பானர்ஜிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
மம்தா பானர்ஜி சிந்தனை
கருத்துக்கணிப்பிலேயே பாஜக இத்தனை இடங்களை பிடிக்கிறது என்றால், நிஜத்தில் இதைவிட அதிகமாக பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது, இதை தடுக்கவேண்டும். மேலும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது, இதை தடுக்க வேண்டும், இவ்வாறு ஏகப்பட்ட சவால்கள் மற்றும் சிந்தனைகளில் மூழ்கி இருக்கிறார் மம்தா பானர்ஜி.