வங்கி மோசடி பற்றி மத்திய அரசு கப்சிப்.. பிரதமர் மோடி, அருண் ஜேட்லி மவுனம் ஏன்?
Recommended Video
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற பல ஆயிரம் கோடி மோசடியில் பெரும்பகுதி 2017-18ம் ஆண்டில் நடந்துள்ளதாக சிபிஐ தனது எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் அமைதி காப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், ரூ.11,400 கோடி மோசடி செய்ததாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிபிஐ எப்ஐஆர்
வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நீரவ் மோடியின் உறவினர் மேகுல் சோக்சி மீது சிபிஐ சமீபத்தில் புதிய எப்ஐஆர் பதிவு செய்தது. அவரது 3 நிறுவனங்கள் மூலம் 2017-18ம் ஆண்டில் ரூ.4,886.72 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அந்த எப்.ஐ.ஆர்-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில்தான், 143 கடன், உத்திரவாத கடிதங்கள்(எல்ஓயு) பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளதாம்.
அம்பலப்படுத்திய சிபிஐ
பல பழைய கடன் உத்தரவாத கடிதங்கள், கடந்த ஆண்டுதான் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்று சிபிஐ கூறியுள்ளது. 2004 முதல் 2017 வரை மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டாலும், அதில் பெரும்பாலான மோசடிகள் கடந்த ஆண்டு அரங்கேறியுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
பாஜக குற்றச்சாட்டு
இந்த சூழ்நிலையிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் முறைகேடு நடந்துள்ளது என்று, பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. பெரும்பாலான வங்கி மோசடி தற்போதைய பாஜக ஆட்சியில் நடந்திருப்பதோடு, இந்த ஆட்சியில்தான் நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியும் சென்றுள்ளார். எனவே இதில் பதிலளிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்ளது.
பிரதமர் மோடி மவுனம்
நாட்டில் இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையிலும், பிரதமர் மோடி மவுனம் கலைக்காமல் உள்ளார். எதிர்க்கட்சிகள் சொல்லவில்லை, சிபிஐயே தனது எப்ஐஆரில் மோடி தலைமையிலான ஆட்சி காலத்தில்தான் அதிகப்படியான அளவுக்கு வங்கி மோசடி நடந்துள்ளதாக சுட்டிக் காட்டிய பிறகும் கூட, பிரதமர் பதில் கூறவில்லை.
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதை சுட்டிக் காட்டியுள்ளார். பள்ளி குழந்தைகள் கல்வி குறித்து 2 மணி நேரம் பேசும் மோடியால், வங்கி மோசடி குறித்து 2 நிமிடம் பேச முடியாதா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சிகள் அனைவரும் மோடியை நோக்கி கேள்வி கணைகளை தொடுக்கிறார்கள். மோடி இன்னும் பேசாமல் இருப்பது, தவறுகள் தங்கள் ஆட்சியில் நடந்தபோதும் தங்களால் அதை தடுக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்வதை போல உள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.