தமிழக அணைகளில் தண்ணீரை சேமித்து வைக்காதது ஏன்? காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி!
தண்ணீரை சேமிக்க தமிழக அரசு முன்வராதது ஏன் என உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி: தமிழகத்தில் உள்ள அணைகளில் தண்ணீரை சேமித்து வைக்காதது ஏன்? என உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது.
அப்போது தமிழகத்தில் உள்ள அணைகளில் தண்ணீரை சேமித்து வைக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் நீர் மேலாண்மை திட்டங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தாதது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேட்டூர் போன்ற அணைகளில் கிடைக்கும் போது நீரை சேமித்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாமே என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். கர்நாடகா தண்ணீர் கொடுக்காவிட்டாலும் கிடைக்கும் நீரை சேமித்து வைத்தால் அவசர காலங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் தண்ணீரை சேமிக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து வாதாடிய தமிழக அரசின் வழக்கறிஞர் தவறான சாகுபடி முறையால் கர்நாடகா காவிரி நீரை வீணடித்து வருவதாக குற்றம்சாட்டினார்.