ஒபாமா குடும்பத்துடன் இந்தியாவில் குடியேறினாலும் ஆச்சரியம் இல்லை - சிவசேனா கிண்டல்
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தால் ஒபமா குடும்பத்துடன் இந்தியாவில் குடியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என சிவசேனா கட்சி கிண்டல் செய்துள்ளது.
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்று முன்தினம் அவர் உரையாற்றினார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி முதல் முறையாக உரையாற்றினார். அங்கு உரையாற்றிய 5-வது இந்தியப் பிரதமர் என்று பெருமையையும் மோடி பெற்றுள்ளார்.
இந்நிலையில், மோடியின் அமெரிக்க பயணம் குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இன்று வெளியான தலையங்கத்தில், பிரதமர் மோடியின் உற்ற தோழனாகவே ஒபாமா மாறிவிட்டார். மோடிக்கும் ஒபாமாவுக்கும் இடையே ஆழமான நட்பு நீடிக்கிறது.
கடந்த காலங்களில் ஒரு அமெரிக்க அதிபரிடம் எந்த இந்திய பிரதமரும் இந்த அளவுக்கு நட்பு பாரட்டியது கிடையாது. இதுபோன்ற நெருங்கிய அன்பைப் பெற்றதில்லை. அதனால், ஒபாமா தனது பதவிக் காலம் முடிந்தவுடன் தனது குடும்பத்தினருடன் சூரத், ராஜ்கோட், போர்பந்தர் அல்லது டெல்லி ஆகிய
நகரங்களில் ஒன்றில் குடிபெயர்ந்தாலும், ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. அதேசமயம் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி உதவி செய்வதும் அமெரிக்காதான்.
இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உதவி செய்யும் அமெரிக்கா, மறுபுறம் பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை புரிந்துகொள்ள வேண்டும் என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications