நடுங்கும் பொருளாதாரம்.. விடாமல் தங்கம் வாங்க அலைபாயும் மக்கள்.. இறக்குமதி 85% உயர்வு
டெல்லி: இந்தியாவின் பொருளாதார நிலைமை மோசமாக இருந்தாலும் கூட தங்கத்தை வாங்கும் மக்களின் ஆசை குறைந்தபாடில்லை. இந்த நிலையில் தங்க இறக்குமதியானது 85 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்தியா ஸ்பெண்ட்ஸ் கட்டுரைத் தெரிவிக்கிறது.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது 3வது பட்ஜெட்டை சமர்ப்பிக்கவுள்ளார். எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. மறுபக்கம் பொருளாதார நிலை தடுமாற்றத்தில் உள்ளது. பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவின் தங்க விற்பனை சற்றும் குறையாமல் உள்ளது. தங்க இறக்குமதியும் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.
10ல் ஒரு பங்கு...
உலகம் முழுவதும் உள்ள தங்கத்தில் பத்தில் ஒரு பங்கு தங்கம் இந்தியா்வில் உள்ளது. அதாவது இந்தியர்களிடம் உள்ள தங்கத்தின் அளவு 20,000 டன் ஆகும்.
ஸ்டாக் வைக்க விருப்பம்...
இந்திய மக்கள் தங்கத்தை விற்பனை செய்வதை தற்போது தவிர்த்து வருகின்றனராம். மாறாக ஸ்டாக் வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனராம். அதை பணமாக மாற்றி வைக்க விரும்புவதில்லையாம்.
சேமிப்புத் திட்டம்...
2015ம் ஆண்டு மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி மக்கள் வீடுகளில் தங்கத்தை சேமித்து வைக்காமல், வங்கிகளில் டெபாசிட் செய்தோ அல்லது பழைய தங்க நகைகளை விற்று பணமாக்கி அதை வங்கியில் டெபாசிட் செய்யவோ உதவும் வகையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஒரு சதவீதம் மட்டுமே...
ஆனால் 20,000 டன் தங்கத்தில் வெறும் 900 கிலோ தங்கம் மட்டுமே அரசின் திட்டத்தை ஏற்று வெளியில் வந்தன. இது நாட்டின் ஒட்டு மொத்த தங்கத்தில் 1 சதவதம் மட்டுமே ஆகும்.
ரூ. 54 லட்சம் கோடி...
இந்த 20,000 டன் தங்கமானது தனி நபர்கள் மற்றும் கோவில்களில் உள்ள நகைகளாகும். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 54 லட்சம் கோடியாகும். இது கடந்த ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த வருவாய் செலவீனமான ரூ. 17.77 லட்சம் கோடியை விட 3 மடங்கு அதிகமாகும்.
கவுரவப் பிரச்சினை...
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த Gold Monetisation Scheme திட்டத்தின் கீழ் வங்கிகளில் வைக்கப்படும் தங்கத்திற்கு வட்டி கிடைக்கும். ஆனால் வங்கியில் சும்மா வைத்திருப்பதை விட வீட்டிலேயே இருந்தால் அது கவுரவம் என பலரும் கருதுவதால் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு குறைவாகவே உள்ளது.
கூடுதல் இறக்குமதி...
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் தங்க இறக்குமதியின் அளவானது 2.91 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.57 பில்லியன் டாலராக இருந்தது என்று மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.
மறைமுக விசயம்...
இதுகுறித்து டெல்லி தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கழகத்தின் பேராசிரியர் பானுமூர்த்தி கூறுகையில், ‘தங்க இறக்குமதியின் உயர்வானது, பல விசயங்களை நமக்குச் சொல்கிறது' என்று கூறினார்.
உயர்வு...
தங்க இறக்குமதியானது 2015-16 ஆண்டின் முதல் 3 காலாண்டில் 2.4 சதவீத உயர்வைக் கண்டிருந்தது. பின்னர் 2016 ஜனவரியில் 85 சதவீதமாக உயர்ந்தது.
ஏற்றுமதி அளவு...
2015 ஏப்ரல் முதல் 2016 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி அளவானது 17.7 சதவீதமாக குறைந்து விட்டது. இது கடந்த 2009-10ல் 3.5 சதவீதம் குறைந்திருந்தது.
சரிந்து உயர்ந்தது...
இந்தியாவின் தங்க இறக்குமதியானது கடந்த காலத்தை விட 2015-16ல் குறைவாகவே இருந்தது. இது கடந்த 2010-11ல் 40 சதவீதமாக இருந்தது. பின்னர் 2011-12ல் 56.5 சதவீதாக உயர்ந்தது. 2012-13ல் இது சற்று குறைந்தது. பின்னர் 2013-14ல் மேலும் சரிந்து 28.70 சதவீதமாக இறங்கியது. 2014-15ல் 34.4 ஆனது. 2015-16ல் 29.40 சதவீதமானது.
உயர்வு...
தங்க ஏற்றுமதியானது கடந்த 2010-11ல் 5.5.6 சதவீதமாக இறுந்தது. இது படிப்படியாக சரிந்து 2014-15ல் அடியோடு சரிந்து 2.84 ஆக இருந்தது. இருப்பினும் கடந்த 2015-16ல் இது நல்ல உயர்வைக் கண்டது. அதாவது 4.3 சதவதமாக உயர்ந்தது.