ஒழுக்கத்தை நிரூபிக்க சூடான இரும்புக் கம்பிகளைப் பிடி... ம.பி. பெண்ணுக்கு விபரீத தண்டனை!
இந்தூர்: தனது ஒழுக்கத்தை நிரூபிக்கவும், தொடர்ந்து கணவரோடு சேர்ந்து வாழவும் மத்தியப்பிரதேசத்தில் சூடான் இரும்புக் கம்பியைப் பிடிக்க இளம்பெண் நிர்பந்திக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் கஞ்சார் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன்பின்பு, வரதட்சணை என்ற பெயரில் ரூ 2 லட்சம் கேட்டு கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அப்பெண்ணை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உள்ளூர் பஞ்சாயத்தில் அப்பெண்ணின் நடத்தை தொடர்பாக கணவர் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். வழக்கை விசாரித்த பஞ்சாயத்தார் அப்பெண் தனது ஒழுக்கத்தை நிரூபிக்க வித்தியாசமான பரீட்சை வைத்துள்ளனர்.
அதாவது, சூடான இரும்புக் கைகளை கைகளால் தூக்க வேண்டும். அப்பெண் தூய்மையானவளாக இருந்தால் அக்கம்பிகளால் காயம் ஏற்படாது என்றும், இல்லையென்றால் காயம் ஏற்படும் என்றும் பஞ்சாயத்தார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இத்தீர்ப்புக்கு உடன்பட சம்பந்தப்பட்ட பெண்ணும், அவரது பெற்றோரும் மறுத்து விட்டனர். இதனால், ஆத்திரமடைந்த பஞ்சாயத்தார் தீர்ப்பை மதிக்காத அப்பெண்ணையும், அவரது குடும்பத்தாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
இதனையடுத்து எந்த ஒரு விழாவிலும், அப்பெண்ணையும், அவரது பெற்றோரையும் பங்கேற்க விடவில்லை. இதனால் மனமுடைந்த அந்த பெண் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை பிரிவு 498 ஏ-ன் கீழ் பதிவு செய்த நீதிமன்றம் அதில், பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் அவர்களின் இரு நெருங்கிய உறவினர்கள் ஆகியோரை சேர்க்க உத்தரவிட்டுள்ளது.