பசியால் மயங்கிய பாட்டி... இறந்ததாக நினைத்து போஸ்ட்மார்டம் அறைக்கு கொண்டு சென்ற ஊழியர்கள்
ராஞ்சி: ராஞ்சி மருத்துவமனை ஒன்றில் இறந்து விட்டதாக கருதி பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லப் பட்ட பெண் ஒருவருக்கு சுவாசம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜார்கண்ட் தலைநகரான ராஞ்சியில் உள்ளது ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ். இங்கு கடந்த வெள்ளியன்று இரவு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார் வயதான பெண்மணி ஒருவர்.
வயோதிகம் மற்றும் பசிக் கொடுமையால் பாதிக்கப் பட்டிருந்த அவரை வீல் சேரில் மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள். போகும் வழியிலேயே அப்பெண் மயங்கி விடவே, அவர் இறந்து விட்டதாகக் கருதிய ஊழியர்கள் அவரை பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அங்கிருந்த மற்றொரு ஊழியர் பாட்டிக்கு இன்னும் சுவாசம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார் அந்த ஊழியர்.
விரைந்து வந்து அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரோடு இருப்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சிகிச்சைப் பெற்று வரும் அப்பெண் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் எனவும், அவரது உறவினர்களே அவரை மருத்துவமனை வளாகத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்க வேண்டும் எனவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக இவ்வாறு சிகிச்சைக்கு வரும் ஆதரவற்றவர்கள் குறித்து போலீசிற்கு தகவல் அளிக்கப் படும் என்றும், ஆனால் இப்பெண் மயக்க நிலையிலேயே இருந்ததால் இவரது விவரங்கள் குறித்து சேகரிக்க இயலவில்லை எனக் கூறப்படுகிறது.