நக்சல்களை வேட்டையாட பெண் கமாண்டோ படை.. நாட்டிலேயே முதல் முறையாக சத்தீஸ்கரில் உருவாக்கம்
தண்டேவாடா: நாட்டில் முதல் முறையாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் உள்ள இடங்களில், பெண் கமாண்டோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற 30 பெண் கமாண்டோக்கள் அடங்கிய குழு தண்டேவாடா மற்றும் பாஸ்தரில் களமிறங்கியுள்ளனர்.
பாம்பின் கால் பாம்பறியும் பழமொழிக்கு ஏற்ப சரணடைந்த பெண் மாவோயிஸ்டுகள் 5 பேர், இந்த பெண்கள் கமாண்டோ படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து இந்த முன்னாள் மாவோயிஸ்டுகள் நன்கு அறிந்திருப்பார்கள்.

எனவே இவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாவோயிஸ்டுக்கு எதிரான கிளர்ச்சி இயக்கத்தில் இருந்த 10 பெண்கள் உதவி கான்ஸ்டபிள்களாக இணைந்துள்ளனர். இந்த பெண்கள் கமாண்டோ குழுவிற்கு தண்டேஸ்வரி ஃபைட்டர்ஸ் ( Danteshwari fighters) என பெயரிடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் வன்முறை தாக்குதல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே சமயத்தில் மாவோயிஸ்டுகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தால், அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதனை ஏற்று ஏராளமான மாவோயிஸ்டுகள் குடும்பத்தினருடன் சரண் அடைந்து இயல்பு வாழ்கைக்கு திரும்பியுள்ளனர். தற்போது அமைக்கப்பட்டுள்ள தண்டேஸ்வரி ஃபைட்டர்ஸ் படை, தண்டேவாடா மாவட்ட கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவ் தலைமையில் செயல்பட உள்ளது. இதன் மூலம் தண்டேவாடா மாவட்டத்தில் ரிசர்வ் படைப் பிரிவுகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இது பற்றி ஊடகங்களுக்கு பேட்டியளித்த பாஸ்தர் பகுதி ஐ.ஜியான விவேகானந்த சின்ஹா, பெண்களின் ஆற்றலை வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும். நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பெண் கமாண்டோக்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள் என நம்பிக்கை உள்ளது என்றார்.
கடந்த ஆண்டில் மத்திய சிறப்பு காவல் படை சார்பில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டது. நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அக்குழு பிரத்யேகமாக தயார்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications