ஆசையாக வேலைக்கு வந்த பெண்கள்.. 10 பேரையும் பக்கத்தில் நிர்வாணமாக நிற்க வைத்து.. குஜராத்தில் கொடுமை
காந்திநகர்: மாதவிடாய் சோதனை நடத்துவதற்காக மாணவிகள் உள்ளாடைகளை கழற்றிய கொடுமை மறக்கும் முன்பாக, குஜராத்தில் மற்றொரு பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத்தின் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றான சூரத்தில்தான், இந்த அராஜகம் நடந்துள்ளது. சூரத் மாநகராட்சியில் பயிற்சி கிளர்க்காக பணியாற்ற தகுதி வாய்ந்த பெண்களுக்கு, 3 வருடங்களாக பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சி காலம் தற்போது நிறைவுற்றது.
விதிமுறைப்படி, பணியில் சேருவதற்கு முன்பாக, இந்த பயிற்சியாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட வேண்டியது அவசியம். அதன்படி, சூரத் மாநகராட்சி மருத்துவ கல்வி மற்றும் ஆய்வு இன்ஸ்ட்டிடியூட் மருத்துவமனையில் நேற்றைய தினம், 10 பெண்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், பரிசோதனை நடத்தப்பட்ட விதம்தான் மிக மோசமாக இருந்துள்ளது. ஒவ்வொரு பெண்களாக அறைக்குள் அழைத்து, பெண் டாக்டர் உடல் பரிசோதனை நடத்துவதற்கு பதிலாக, 10 பேரையும், ஒரே இடத்தில் நிர்வாணமாக நிற்க வைத்துள்ளனர். திருமணமாகாத பெண்களுக்கும் கருவுற்றுள்ளாரா என பரிசோதனை நடத்தியுள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அறிந்ததும், சூரத் மாநகராட்சி, ஊழியர் சங்கம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளை விசாரித்து 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க, மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் டாக்டர் கல்பனா தேசாய், உதவி மாநகராட்சி ஆணையர் காயத்ரி ஜரிவாலா மற்றும் நிர்வாக பொறியாளர் துருபி கலத்தியா ஆகியோரைக் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
"சோதனைக்காக அறையில் பெண்களை ஒருவரையடுத்து அடுத்தவரை அழைப்பதற்கு பதிலாக, பெண் மருத்துவர்கள் அவர்களை 10 பேராக மொத்தமாக, நிர்வாணமாக நிற்க வைத்தார்கள். மற்றவர்களுடன் நிர்வாணமாக நிற்க அவர்களை கட்டாயப்படுத்துவது இழிவான செயல். இந்த நடைமுறை சட்டவிரோதமானது மற்றும் மனிதகுலத்திற்கு எதிரானது." என்று தொழிற்சங்கம் தனது புகாரில் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் அகமது ஷேக் கூறுகையில், பரிசோதனையின் போது கர்ப்பம் குறித்த அபத்தமான கேள்விகளைக் கேட்டுள்ளார்கள். அந்தக் குழுவில் உள்ள திருமணமாகாத பெண்கள் கூட, அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா இல்லையா என்பதைச் சரிபார்ப்பதற்கான உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மற்ற பெண்களுக்கு முன்னபாக, சங்கடமான சூழ்நிலையில் நிற்க வைக்கப்பட்டனர், இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத்தின் பூஜ் டவுனில், சில நாட்கள் முன்பாக, கல்லூரி மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து, அவர்கள் மாதவிடாய் காலத்தில் உள்ளனரா என்பதை, சோதித்து பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அடுத்த சர்ச்சையில், குஜராத் மாநிலத்தின் மற்றொரு பகுதி சிக்கியுள்ளது.