ஆஹா.. ஆந்திராவில் பெருந்திரளாக வாக்களிக்க குவிந்த பெண்கள்.. ஜெகன் vs சந்திரபாபு! யாருக்கு லாபம்?
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் இன்று லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடைபெறும் நிலையில், அங்கு அதிகப்படியான மக்கள் குறிப்பாக பெண்கள் வாக்களிக்கத் திரண்டுள்ளனர்.
நமது நாட்டில் இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அத்துடன் ஆந்திர மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலும் நடக்கிறது. அங்குள்ள 175 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.

ஆந்திராவைப் பொறுத்தவரை அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், காங்கிரஸ் களத்தில் இருந்தாலும் முக்கிய போட்டி என்பது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் இடையே தான் நிலவுகிறது.
திரண்ட வாக்காளர்கள்: இன்று காலை 7 மணிக்கு ஆந்திராவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். பல்வேறு ஊர்களில் இருந்தும் கூட வாக்களிக்கப் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூட பொதுமக்கள் ஆர்வமாக வாக்களிக்கத் திரண்டு வந்துள்ளதாகவே கூறியிருந்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது அரசியல் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் மக்கள் திரண்டு வந்து வாக்களித்ததை நான் பார்த்ததில்லை. அமெரிக்கா, பெங்களூர், சென்னை எனப் பல ஊர்களில் இருந்து மக்கள் வாக்களிக்க வந்துள்ளனர். ஜனநாயகத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க மக்கள் விரும்புகிறார்கள்" என்று கூறியிருந்தார்.

பெண்கள்: குறிப்பாக ஆந்திராவில் பல்வேறு தொகுதிகளிலும் வாக்குச் சாவடிகளில் பெண்கள் ஆர்வமாக வாக்களிக்கக் குவிந்துள்ளனர். மாநிலத்தில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் ஆண்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகமாகத் திரண்டுள்ளனர். விசாகப்பட்டினம் முதல் சித்தூர் வரை பெண்களையே அதிகப்படியான வாக்குச்சாவடிகளில் பார்க்க முடிகிறது. காலை முதலே ஆர்வமாகப் பெண்கள், முதியோர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்..
காலை முதலே இந்தளவுக்குப் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் திரண்டு வந்து வாக்களித்து உள்ளதால் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..

யாருக்கு லாபம்: பொதுமக்கள் ஆளும் தரப்பு மீது கடும் எதிர்ப்பில் உள்ளதாகவும் இதன் காரணமாகவே திரண்டு வந்து வாக்களிப்பதாகத் தெலுங்கு தேசம் கட்சி தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம் ஜெகன்மோகன் ரெட்டியின் திட்டத்தால் பயனடைந்தவர்கள் மீண்டும் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே திரண்டு வந்து வாக்களிப்பதாக ஆளும் ஒய்எஸ்ஆர் தரப்பினர் கூறுகிறார்கள்.
இரு தரப்பினரும் இப்படிச் சொன்னாலும் அதில் எது உண்மை என்பது வரும் ஜூன் 4ஆம் தேதி தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications