வேலை வேணுமா, இந்தி படி.. பயமுறுத்த வருகிறது உலக இந்தி மாநாடு!
டெல்லி: 32 ஆண்டுகளுக்குப் பிறகு உலக இந்தி மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவில் வேலைவாய்ப்புக்கு ஏற்ற ஒரே மொழி இந்திதான் என்பதை வலியுறுத்தப் போகிறார்களாம்.
இதுவும் மத்திய அரசின் ஒரு வகையான இந்தித் திணிப்பு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்தி தெரி்ந்தால்தான் வேலைவாய்ப்பு என்பது போல காட்ட இந்த மாநாட்டின் மூலம் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
வேலைவாய்ப்பைப் பிரகாசமாக்க இந்தி தெரிந்து கொள்வது முக்கியம் என்ற ரீதியில் இந்த மாநாட்டின் முக்கிய அம்சம் இருக்குமாம்.
மாநாட்டை வெற்றிகரமாக்க மோடி அரசு ஆர்வம்
இந்த இந்தி மாநாட்டை வெற்றிகரமானதாக மாற்ற நரேந்திர மோடி அரசு முழு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாம். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொள்ளவுள்ளாராம்.
சமஸ்கிருத மாநாட்டைத் தொடர்ந்து
மத்திய அரசு சமீபத்தில் பாங்காக்கில் உலக சமஸ்கிருத மாநாட்டை நடத்தியது. இதையடுத்து தற்போது இந்தி மாநாடு மீது கவனத்தைத் திருப்பியுள்ளது.
போபாலில்
உலக இந்தி மாநாடு போபால் நகரில் செப்டம்பர் 10,11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 10வது உலக இந்தி மாநாடு இது. 3 நாள் மாநாட்டில் 12க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்தி உலகம்.. வாய்ப்புகளும், விரிவுகளும்
இந்த மாநாட்டின் கருத்தாக Hindi Jagat: Vistar avm sambhavnai அதாவது இந்தி உலகம்: விரிவுகளும், வாய்ப்புகளும் என்று வைத்துள்ளனர்.
பழங்கதைக்கு குட்பை
இதற்கு முன்பு நடந்த மாநாடுகளில் இந்தி இலக்கியம் குறித்துத்தான் அதிகம் பேசி வந்துள்ளனர். ஆனால் இந்த மாநாட்டை அதிலிருந்து மாற்றி இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று இந்திய மக்களை "பயமுறுத்தவுள்ளனராம்".
இந்தி தெரியாதவர்களையும் இழுக்க
நாட்டில் இப்போது கணிசமான மக்கள்தான் இந்தி பேசுகிறார்கள். பெரும்பாலானவர்கள் தங்கது தாய் மொழி மற்றும் ஆங்கிலத்தில்தான் பேச ஆர்வமாக உள்ளனர். எனவே இந்தியில் பேசினால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலை கிடைக்கும் என்று இந்த மாநாட்டின் மூலமாக இந்தி பேசாதவர்களுக்கு வலை விரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.