என் தலையை மம்தா உதைக்கட்டும்.. ஆனால் மக்கள் கனவுகள் உதைபட அனுமதிக்க மாட்டேன்.. பிரதமர் உருக்கம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, என்ன நடந்தாலும் வங்கத்து மக்களின் கனவுகள் உதைபடுவதை அனுமதிக்க மாட்டேன் என்று உருக்கமாகப் பேசியுள்ளார்,
மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 30 தொகுதிகளில் வரும் மார்ச் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் வாரமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக, மேற்கு வங்கத்தில் இந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது தோற்படித்தவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக களமிறங்கியுள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் வங்கத்தில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
உண்மையான மாற்றம்
இந்நிலையில், அவர் இன்று மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மேற்கு வங்கத்திற்கு உண்மையான மாற்றத்தை பாஜக கொண்டு வரும். இனி வங்கத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, மோசடி ஆகியவற்றுக்கு இடம் இல்லை" என்று ஆவேசமாகப் பேசினார்.
தோல்வியை ஒப்புக்கொண்டார்
விரைவில் அமையும் பாஜக அரசு கொண்டு வரும் திட்டங்களால் வங்கத்தில் உள்ள ஏழை மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் மிரட்டி பணம் பறித்தவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மம்தா பானர்ஜி ஏற்கனவே தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்றும் இதனால்தான் அவர் ஈவிஎம் இயந்திரங்கள் குறித்துக் கேள்வி எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திரிணாமுல் விளம்பரம்
இந்தத் தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக அரியணை ஏற வேண்டும் என்பதில் மம்தா உறுதியாக உள்ளார். இதனால் இடதுசாரிகளும் தங்களுடன் கைகோர்க்க வேண்டும் என அழைப்புவிடுத்த அவர் பாஜகவுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியின் முகம் இருக்கும் புட்பாலை எட்டி உதைப்பது போன்ற போஸ்டர்களை இணையத்தில் வெளியிட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
எட்டி உதைக்கட்டும்
இது குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மம்தா பானர்ஜி எனது தலையை எட்டி உதைக்கலாம். அதை நான் அனுமதிப்பேன். ஆனால் மேற்கு வங்க மக்களின் கனவுகள் உதைபடுவதை என்றும் நான் அனுமதிக்க மாட்டேன். மேற்கு வங்க மக்களுக்குச் சேவை செய்ய நான் எப்போதும் தயாராகவே உள்ளேன்" என்று மிகவும் உருக்கமாக அவர் பேசினார்.