ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞரை மீட்க பின்னோக்கி சென்ற ரயில்
நகரி: ஆந்திர மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி வழுந்த இளைஞரை காப்பாற்றுவதற்காக ரயிலை பின்னோக்கி இயக்கியனர். இருப்பினும் அந்த இளைஞரை காப்பாற்ற முடியவில்லை.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளி கூடாவைச் சேர்ந்தவர் ஹரி (24). இவர் விசாகப்பட்டினம் பென்துருத்தியில் நடந்த கவுரி தேவி விழாவில் பங்கேற்க நண்பர்களுடன் சென்றார்.
விழா முடிந்ததும் அவர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து சின்மாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டு இருந்தனர். ரயில் படிக்கட்டில் நின்று ஹரி பயணம் செய்தார். நரசிப்பட்டினம்- குள்ளிப்பாடு இடையே ரயில் செல்லும் போது எதிர்பாராதவிதமாக ஹரி தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து
உடனே உடன் இருந்த ஹரியின் நண்பர்கள் ரயிலை நிறுத்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் வேகமாக வந்த ரயில் 1 கிலோ மீட்டர் தூரம் சென்றே நின்றது. ரயில் சக்கரத்தில் இடையில் ஹரி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை மீட்டு காப்பாற்றியே தீர வேண்டும் என்று நண்பர்கள் என்ஜின் டிரைவரிடம் கெஞ்சினர்.
இதையடுத்து ரயிலை என்ஜின் டிரைவர் பின்னோக்கி ஓட்டினார். இறுதியில் ஹரியை நண்பர்கள் மீட்டு அதே ரயிலில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலயே பரிதாபமாக உயிரிழந்தார். இறுதி வரை போராடியும் தங்கள் நண்பனை காப்பாற்ற முடியாவில்லை சோகத்துடன் நண்பர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.