வேறு சாதிப் பெண்ணை காதலித்த 17 வயது சிறுவனை நிர்வாணமாக்கி ஊர்வலம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்த 17 வயது பிராமண சிறுவன் நிர்வாணமாக்கப்பட்டு, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள வாம்போரி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிராமண சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த மாலி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவனின் செல்போன் அப்பெண்ணிடம் இருந்துள்ளது. இதன் மூலம் அவர்களின் உறவு அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாரை தாக்கினர். மேலும் சிறுவனை நிர்வாணமாக்கி, அவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பெண்கள் உள்பட 17 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 22 ஆயிரம் பேர் வசிக்கும் வாம்போரி பகுதியில் பிராமணர்கள் மற்றும் மாலி சமூகத்தினர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவனை அவமானப்படுத்திய சம்பவம் குறித்த வீடியோ போலீசாருக்கு கிடைத்துள்ளது.