நேபாளத்தில் மாவை சாப்பிட்டு ஒரு வாரம் இடிபாடுகளுக்குள் இருந்த 101 வயது தாத்தா
காத்மாண்டு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் இடிபாடுகளில் இருந்து 101 வயது முதியவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 250 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தால் 6 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் இன்னும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்று கடந்த சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 50 மைல் தொலைவில் உள்ள நுவாகோட் மாவட்டத்தில் இருக்கும் கிம்தங் கிராமத்தில் இடிபாடுகளில் இருந்து 101 வயது ஃபுன்ச்சு தமாங் என்பவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சிறுகாயங்களுடன் மீட்கப்பட்ட தமாங் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது இடது கையில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவரை அவரது குடும்பத்தார் கவனித்துக் கொள்கிறார்கள்.
நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஒன்றான சிந்துபால் சவுக்கில் நேற்று 3 பெண்கள் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் நிலச்சரிவில் சிக்கியிருந்திருக்கிறார். மற்ற 2 பெண்கள் வீடு இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்டனர்.
தமாங்கும் அவரது வீடு இடிந்து விழுந்தபோது இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். அவர் இடிபாடுகளில் தனக்கு அருகே இருந்த மாவை உண்டு, நீரை குடித்து ஒரு வாரம் தாக்குப்பிடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications