செளதியில் ஏமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்- தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் பரிதாப பலி
நஜ்ரான்: செளதி அரேபியாவின் நஜிரான் பகுதியில் ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய பயங்கர ஏவுகணைத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஏமனில் அதிபர் மன்சூதி ஹைதிக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏமனின் பெரும்பாலான நகரங்களை ஹவுத்தி கிளர்ச்சி குழு கைப்பற்றியுள்ளது.

அந்நாட்டு அதிபர் ஹைதி, செளதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே செளதி- ஏமன் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இருதரப்பு தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செளதியின் எல்லை பகுதியான நஜ்ரானில் சனிக்கிழமை மாலை ஏமன் ஹவுத்தி கிளர்ச்சி குழு பயங்கர ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில் 2 இந்தியர்கள் உட்பட மொத்தம் 3 பேர் பலியானதாக செளதி அரசு தெரிவித்துள்ளது.
பலியான 2 பேரும் 2 தமிழர்கள் ஆவர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த கில்மி மற்றும் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அந்தோணி ஆகியோர் உயிரிழந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கில்மி கடந்த 8 மாதங்களுக்கு முன்னர்தான் ஏர்வாடி வந்துவிட்டு செளதி திரும்பியிருந்தார். அவரது உடலை அங்கேயே அடக்கம் செய்யப் போவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அந்தோணியின் உறவினர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications