அப்படியே "மும்பை" பாணியில் நடத்தப்பட்ட பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்.... ஊரெங்கும் சடலங்கள்...
பாரீஸ்; பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அப்படியே 2008ஆம் ஆண்டு நமது மும்பை நகரில் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பாணியிலேயே இருக்கிறது.
பாரீஸ் நகரத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள் 7 இடங்களில் பிரிந்து சென்று கொடூர தாக்குதல் நடத்தினர். உணவகம், இசைக்கச்சேரி அரங்கு என பொதுமக்கள் அதிகம் கூடியுள்ள இடங்களைக் குறிவைத்து இத்தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதல்களில் இதுவரை 158 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் நகரத்தில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு தாங்கள்தான் பொறுப்பு என ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
2008ஆம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி நடத்திய ஸ்டைலில் அப்படியே பாரீஸிலும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் ரயில் நிலையம், நட்சத்திர விடுதிகள் என பிரிந்து சென்று பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தினர். ஹோட்டல்களில் வெளிநாட்டினர் உள்ளிட்ட பொதுமக்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்து வைத்து படுகொலை செய்தனர்.
இதேபோல பாரீஸ் படாகிளனில் இசைக்கச்சேரி நடைபெற இருந்த அரங்கம் ஒன்றுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் அங்கிருந்த 100க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதியாக பிடித்ததுடன் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து ஈவிரக்கமின்றி படுகொலை செய்துள்ளனர்.
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். எஞ்சியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது பாரீஸில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.