புதினால் ஜின்பிங்கிற்கு சிக்கல்.. வங்கதேசம் விரைந்த 3 ரஷ்ய போர்க்கப்பல்கள்! சீனாவுக்கு விழும் அடி
டாக்கா: வங்கதேசம் - சீனா இடையேயான உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் தான் திடீரென்று ரஷ்யாவின் 3 போர்க்கப்பல்கள் வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்துக்கு சென்றுள்ளார். சமீபத்தில் வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் ரஷ்யா சென்று வந்த நிலையில் அந்த நாட்டின் போர்க்கப்பல்கள் வங்கதேசத்துக்குள் நுழைந்துள்ளது. இதன் பின்னணியில் சீனாவை ஓரம்கட்டும் முயற்சி உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நடந்து வருகிறது. இந்த அரசு நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. அதேவேளையில் பாகிஸ்தான், சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் கூட முகமது யூனுஸ் சீனாவுக்கு சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இருநாடுகள் இடையே வர்த்தக ரீதியான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்குஇந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா வழியாக பூடான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு சரக்குகளை அனுப்பி வைக்க வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.
இது வங்கதேசத்துக்கு பிரச்சனையாக மாறி உள்ளது. இனி வங்கதேசம் பூடான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்ய கூடுதல் பணத்தை செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சீனாவுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட வங்கதேசத்துக்கு தண்டனை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
இப்படியான சூழலில் தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது வங்கதேசத்துக்குள் ரஷ்யாவின் 3 போர்க்கப்பல்கள் என்ட்ரி கொடுத்துள்ளன. வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்துக்கு ரஷ்யாவின் ரெஸ்கி, ஆல்டார் சிடென்ஷாபோவ் மற்றும் பெச்செங்கா என்ற 3 போர் கப்பல்கள் நான்கு நாள் பயணமாக சென்றுள்ளன. இந்த போர்க்கப்பல்களை வங்கேதசத்தின் கடற்படையை சேர்ந்த பிஎன்எஸ் காலித் பின் வாலிட் என்ற கப்பல் வரவேற்றது.
இந்த நடவடிக்கை என்பது சீனாவுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. அதாவது சீனாவிடம் இருந்து வங்கதேசம் அதிக ராணுவ தளவாடங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறது. அதேபோல் கடற்படை, விமானப்படையிலும் சீனாவை தான் வங்கதேசம் அதிகம் நம்புகிறது. ஆனால் வங்கதேசத்தை பொறுத்தவரை சீனாவை மட்டுமே நம்பினால் எந்த பயனும் இல்லை. சீனா உலகம் முழுவதும் பல நாடுகளிடம் பகைமையை சம்பாதித்து வைத்துள்ளது.
இதனால் இன்னொரு நாட்டுடன் நல்லுறவை வளர்க்க வேண்டும் என்று வங்கதேசத்தின் ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் நினைக்கிறார். அப்படி நல்லுறவை வளர்க்க அவர் தேர்வு செய்த நாடு தான் ரஷ்யா. இதையடுத்து சமீபத்தில் 5 நாள் பயணமாக வாக்கர் உஸ் ஜமான் ரஷ்யா சென்றார். அங்கு அவர் ரஷ்யாவின் முப்படை அதிகாரிகளுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு இருநாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவது பற்றி ஆலோசித்தார்.
இந்த ஆலோசனையை தொடர்ந்து ரஷ்யாவின் 3 போர்க்கப்பல்கள் வங்கதேசத்துக்கு சென்றுள்ளது. இது வெறும் டிரெயிலர் தான். அதாவது ரஷ்யாவை பொறுத்தவரை ஆசியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்று நினைக்கிறது. அதன்படி நம் நாடும், ரஷ்யாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. ஆனால் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்டவை சீனாவின் நட்பு நாடுகளாக உள்ளன. இந்த நாடுகள் சீனாவிடம் இருந்து தான் அதிகமான ஆயுதங்களை வாங்குகின்றன. இந்த நிலையை மாற்றம் வேண்டும் என்று ரஷ்யா நினைக்கிறது.
அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுடன் ரஷ்யா நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்குஆதரவாக ரஷ்யா உதவி செய்து வருகிறது. அதேபோல் பாகிஸ்தானுடன் சமீபத்தில் கடற்படை கூட்டு பயிற்சிக்காக ரஷ்யா தனது 3 போர்க்கப்பல்களை அனுப்பியது. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது ரஷ்யா, வங்கதேசத்துக்கு 3 போர்க்கப்பல்களை அனுப்பி உள்ளது.
இதுபற்றி வங்கதேசத்தின் கடற்படை சார்பில், ‛‛வங்கதேசத்துக்கு ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் வருகை தந்துள்ளன. இது நல்லெண்ணம் அடிப்படையிலான பயணமாகும். ரஷ்யாவின் போர்க்கப்பல்களை வங்கதேசம் அன்புடன் வரவேற்கிறது. இது இருநாடுகள் இடையே பகிரப்பட்ட அமைதி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கான உறுதியை எடுத்து காட்டும் வகையில் உள்ளது. இருநாடுகளின் மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வங்கதேச கடற்படை ரஷ்யவுடனான உறவை வளர்ப்பதில் உறுதியாக உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம் - ரஷ்யா இடையேயான இந்த நடவடிக்கை என்பது சீனாவின் ஆதிக்கத்தை சரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications